பதிவு செய்த நாள்
09 ஆக2011
00:09
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று, மிகவும் மோசமாக இருந்தது. சென்ற வெள்ளிக்கிழமையன்று, பங்கு வியாபாரம் முடிந்த நிலையில், எஸ் அண்டு பி என்று சுருக்கமாக அழைக்கப்படும், 'ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம், அமெரிக்காவின் கடன் தகுதிக்கான 'ஏஏஏ' குறியீட்டை, 'ஏஏ+' ஆக குறைத்தது.அமெரிக்காவின் கடன் பெறும் தகுதி குறைந்ததால், அதன் தாக்கம் திங்களன்று, உலகப் பங்குச் சந்தைகளில், எதிரொலிக்கும் என, பல ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப, நம் நாட்டிற்கு முன்பாக, இதர ஆசிய பங்குச் சந்தைகளில், தொடங்கிய பங்கு வியாபாரம், கடும் சரிவைச் சந்தித்தது. இதன் தாக்கம், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 267 புள்ளிகள் சரிவடைந்தது. அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக, 'சென்செக்ஸ்' 500 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி, திட்டக் குழுவின் துணைத்தலைவர் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் இந்தியாவின் பொருளாதார வலிமை குறித்து, விளக்கம் அளித்தனர். இதைத்தொடர்ந்து, மதியத்திற்குப் பிறகு, சரிவு நிலை ஓரளவிற்கு தடுத்து நிறுத்தப்பட்டது.மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம், வலுவாகவே உள்ளது. எனவே, நாம் வெளிநாட்டு செயல்களால் ஏற்படும் தாக்கம் குறித்து, அச்சம் கொள்ளத் தேவையில்லை. ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், உலக நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.தேவை ஏற்படும் பட்சத்தில், நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், செலாவணிச் சந்தையில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கும் வகையிலும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக, அன்னியச் செலாவணிகளை, தட்டுப்பாடு இல்லாத வகையில், அதிகளவில் புழக்கத்தில் விடவும் தயார் நிலையில் உள்ளன.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் தான், உலகப் பங்குச் சந்தைகளில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின், பொருளாதார வளர்ச்சி, மற்ற நாடுகளை விட, சிறப்பாகவே உள்ளது. எனவே, தற்போதைய சரிவு நிலை என்பது, தற்காலிகமானது தான்.கடந்த 2008ம் ஆண்டு, அமெரிக்க கடன் வீட்டு வசதி, கடன் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியின் போதும், இதே நிலைதான் உருவானது. அப்போதும், மத்திய அரசின் நடவடிக்கைகளால், நாட்டின் பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பிறகே, பல அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியப் பங்குச் சந்தைகளில், அதிகளவு முதலீடுகளை மேற்கொண்டன. தற்போதும், மத்திய அரசு இது குறித்த விசயத்தில், உரிய நடவடிக்கைகளை எடுத்து, நிலவரத்தைச் சரி செய்ய, ஆவன செய்யும். இவ்வாறு, நிதியமைச்சர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறும்போது, ' அமெரிக்காவின் கடன் தகுதி குறியீடு குறைக்கப்படும் என்பது, எதிர்பார்த்த ஒன்றுதான். இதனால்தான், உலகளவில் பங்கு வர்த்தகத்தில், சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை, ஒரு சில தினங்களுக்கு நீடிக்கக் கூடும். பிறகு, இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். எனவே, இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை.பங்குச் சந்தை போன்று நிதிச் சந்தையிலும், சிறிது தேக்க நிலை, ஏற்படக்கூடும். இருப்பினும், உள்நாட்டு நிதிச் சந்தை மிகவும் திறமையாக நிர்வகிக்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி, ரூபாய் மற்றும் செலாவணி புழக்கத்தை ஆய்ந்து, அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளும். 1917ம் ஆண்டிற்குப் பிறகு, முதன் முறையாக, அமெரிக்காவின் கடன் தகுதி மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினால்தான் உலகளவில், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட, முன்னணி நாடுகளின் பொருளாதார வல்லுனர்களும், தலைவர்களும் உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பதற்ற நிலையை நிலைப்படுத்த, உரிய நடவடிக்கை எடுப்பார்கள். எனவே, அடுத்த ஒரு சில தினங்களில், பங்கு வர்த்தகம் உள்ளிட்ட, இதர வர்த்தக நடவடிக்கைகள் இயல்பு நிலைக்குத் திரும்பும்' என்று தெரிவித்தார்.திங்களன்று, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தை களில் ஏற்பட்ட பின்னடைவால், மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' 315.69 புள்ளிகள் சரிவடைந்து, 16,990.18 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக இப்பங்குசந்தையின் குறியீட்டு எண், 17,247.87 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,759.45 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 24 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 6 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி', 92.75 புள்ளிகள் குறைந்து, 5,118.50 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 5,204.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,054.05 புள்ளிகள் வரையிலும் சென்றது. நேற்றைய வர்த்தகத்தில், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், உலோகம், வங்கி, பொறியியல், உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|