பதிவு செய்த நாள்
14 ஆக2011
03:53
மும்பை:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளின் தாக்கம் சற்று குறைந்துள்ளது என்றாலும், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து தள்ளாடும் நிலையில்தான் உள்ளது. பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் தான் உள்ளது. வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 219 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,839 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 65 புள்ளிகள் சரிவடைந்து, 5,072 புள்ளிகளிலும் நிலைபெற்றன.சென்ற வாரத்தில் மட்டும், 'சென்செக்ஸ்' 151 புள்ளிகள் குறைந்து போனது. அமெரிக்க பிரச்னைகளால், சந்தை மேலும் இறக்கம் காணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பங்கு வர்த்தகம் அதிகளவில், வீழ்ச்சி காணவில்லை என்பது ஆறுதல் அளித்தது.வெள்ளியன்று ஏன் குறைந்தது? வியாழனன்று அமெரிக்க பங்கு சந்தைகளில் வர்த்தகம் முன்னேற்றம் கண்டது. இதனால் வெள்ளியன்று, ஆசிய பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்றாகவே இருந்தது. உள்நாட்டிலும், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி நன்றாக இருந்தது என்ற செய்தி வெளியானது. ஆனால், இது பங்குச் சந்தையில் எவ்வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நாட்டின் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தக்கூடும் என்ற அச்சப்பாடுதான் இதற்கு காரணம். அமெரிக்காவின் கடன் தரக் குறியீடு: அமெரிக்காவின் கடன் தரக் குறியீடு, பல ஆண்டுகளாக, 'ஏஏஏ' என்ற அளவில், இருந்து வந்தது. இது, 'ஏஏ+' என்ற அளவில் குறைக்கப்பட்ட நிலையில், பல ஐரோப்பிய நாடுகளின் கடன் தரக் குறியீடு குறைக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. எஸ் அண்டு பி நிறுவனம் மட்டுமே, அமெரிக்காவின் கடன் தரக் குறியீட்டை குறைத்துள்ளது. மற்ற இரண்டு, தரக்குறியீட்டு நிறுவனங்கள் பழைய குறியீட்டையே தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உர நிறுவனங்கள்: யூரியா உர விலை மீதான கட்டுப்பாடு நீக்கப்படும் என்ற எதிர்பார்ப்பால், உரத் துறை நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. குறிப்பாக, சம்பல் பெர்டிலைசர்ஸ் நிறுவனப் பங்கின் விலை, எப்போதும் இல்லாத அளவிற்கு, உச்ச விலையை எட்டியுள்ளது. காலாண்டு முடிவுகள்: இந்தியா சிமென்ட்ஸ், டாட்டா ஸ்டீல், எவரான், லவ்வபிள் லிங்கரீஸ், பேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஆர்.ஈ.சி., ஆகிய நிறுவனங்களின் காலாண்டு லாபம், கடந்த ஆண்டின், இதே காலாண்டை விட, அதிகரித்துள்ளது. அதேசமயம், செ ஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், பீ.பி.சி.எல். ஆகிய நிறுவனங்களின் லாபம் குறைந்துள்ளது. விமான சேவை நிறுவனங்கள்: விமான சேவையில் ஈடுபட்டு வரும், பெரும்பாலான நிறுவனங்கள் இழப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு காரணம், ஒன்று எரிபொருள் விலையேற்றம், இரண்டாவது நிறுவனங்களுக்கிடையே உள்ள கடுமையான போட்டி. இதனால்தான் இத்துறை நிறுவனங்களின் இழப்பு தொடர்கிறது. தற்போது எரிபொருள் விலை, சற்று குறைந்துள்ளதால், இனி வரும் கலாண்டுகளில் இவற்றின் செயல்பாடுகளில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்படக்கூடும். ச õப்ட்வேர் துறை நிறுவனங்கள்: இந்திய சாப்ட்வேர் துறை நிறுவனங்களின் ஏற்றுமதி, சென்ற ஜூன் மாதம் 7 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளால், இத்துறை நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. உங்களுடைய தொகுப்பில், சாப்ட்வேர் நிறுவனப் பங்குகள் அதிகளவில் இருந்தால், அதனை பாதியாகக் குறைத்துக் கொள்ளலாம். அதேசமயம், இதுவரை சாப்ட்வேர் நிறுவனப் பங்குகளை வாங்காதவர்கள், இவற்றின் பங்குகளை ஓரளவிற்கு வாங்கி வைக்கலாம். புதிய வெளியீடுகள்: எல் அண்டு டி பைனானஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பங்குகள், வெள்ளியன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. 52 ரூபாய்க்கு வெளியிடப்பட்ட பங்குகள் என்பதால், லாபம் அதிகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பட்டியலிடப்பட்ட சிறிது நேரத்தில், மேலே சென்று, பின்பு 50 ரூபாய்க்கும் கீழாக சென்று முடிவுற்றது. தற்போது,வெளியீட்டு விலைக்கும் கீழாக உள்ளதால், இதன் பங்குகளை நீண்ட கால அடிப்படையில் வாங்கி வைக்கலாம்.ட்ரீ ஹவுஸ் எஜூகேஷன் நிறுவனத்தின் வெளியீட்டிற்கு, சுமாரான அளவிற்கே, பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன. மொத்தமாக, 1.85 மடங்கிற்கும், சிறிய முதலீட்டாளர்களிடமிருந்து 2.76 மடங்கிற்கும் விண்ணப்பங்கள் வந்துள்ளன, புரூக்ஸ் லேப்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு இம்மாதம் 16ம் தேதி தொடங்கி, 18ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. என்ன பங்குகள் வாங்கலாம்? கோல் இந்தியா, டாட்டா ஸ்டீல், லவ்வபுள் லிங்கரீஸ், பேஜ் இண்டஸ்டீரீஸ், குஜராத் ஸ்டேட் பெட்ரோநெட் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை நீண்டகால அடிப்படையில் வாங்கலாம். வரும் வாரம் எப்படி இருக்கும்? ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை மீண்டும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு வலுவடைந்து வருகிறது. இதனால், பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும்.இருப்பினும், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்கு உள்ளதும், ஏற்றுமதி மற்றும் தொழில்துறை உற்பத்தி சிறப்பான அளவில் வளர்ச்சியடைந்துள்ளதும் சாதகமான அம்சங்களாகும். மேலும், அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தைகளில், அதிகளவில் முதலீடு மேற்கொள்வார்கள் என்ற நிலைப்பாடும் உள்ளது. எனவே, சந்தை மிக அதிகளவில் இறக்கத்தை சந்திக்காது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. சேதுராமன்சாத்தப்பன்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|