பதிவு செய்த நாள்
16 ஆக2011
03:36
சென்னை:மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 'ஸ்விப்ட்' காரை அறிமுகம் செய்ய உள்ளது. பழைய 'ஸ்விப்ட்' கார் உற்பத்தி, ஜூன் மாத இறுதியுடன் நிறுத்தப் பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அதிநவீன தொழில்நுட்பம், உள் மற்றும் வெளிப்புற வடிவமைப்பு, பழைய 'ஸ்விப்ட்' காரை விட அதிக மைலேஜ் தரக்கூடிய தன்மை என பல புதிய அம்சங்களுடன் இந்த கார் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, இந்நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் (சந்தைப்படுத்துதல்)சசங் ஸ்ரீவத்சவா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: புதிய 'ஸ்விப்ட்' கார் நாடு தழுவிய அளவில் இவ்வார மத்தியில், அறிமுகம் செய்யப்பட உள்ளது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வகையில், தலா மூன்று மாடல்களில் இக்கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் கார், 12.6 நொடிகளிலும், டீசல் கார்,14.8 நொடிகளிலும்,100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும்.மேலும், பெட்ரோல் கார் 1 லிட்டருக்கு 18.6 கிலோ மீட்டரும், டீசல் கார் லிட்டருக்கு 22.9 கிலோமீட்டரும் கொடுக்கக்கூடியது. அதேசமயம், பழைய 'ஸ்விப்ட்' கார் லிட்டருக்கு முறையே, 17.9 கி.மீ மற்றும் 21.7 கி.மீ கொடுக்கக்கூடியது. வாகனத்தின் உறுதித்தன்மை நிலைப்படுத்தப்பட்டுள்ள அதேநிலையில், வாகனத்தின் எடை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இதுவரை கார்களில், உலோகத்தால் ஆன எரிபொருள் டாங்குகளே பொருத்தப்பட்டு வந்தன. இந்த நிலை மாற்றப்பட்டு தற்போது, ஆறு அடுக்கு கொண்ட பாலிமரால் ஆன டாங்குகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதனால், எடை குறைந்துள்ளதுடன், துருப்பிடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது. பழைய காரை விட, புதிய 'ஸ்விப்ட்' காரின் நீளம், 90 எம்.எம் என்ற அளவிலும், அகலம் 5 எம்.எம். உயர்த்தப் பட் டுள்ளது. காரின் உட்புறமும் பல்வேறு புதிய வசதிகள் இடம் பெற்றுள்ளன.நிறுவனத்தின் மானேசர் தொழிற் சாலை யில், இக்கார்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு மாதம் ஒன்றுக்கு, 17,000-18,000 கார்கள் உற்பத்தி செய்யப்படும். இது வரை, புதிய 'ஸ்விப்ட்' கார் வேண்டி, 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். நிறுவனம், 6,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதில், மானேசர் தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக, 1,800 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. மீதமுள்ள தொகை, ஆராய்ச்சி, மேம்பாட்டு பணிகளுக்கும், ரோட்டக் என்ற இடத்தில், வாகன பரிசோதனை தடம் போன்றவற்றை அமைப்பதற்காகவும் செலவிடப்பட உள்ளது. இந்தியாவில், நிறுவனத்திற்கு தமிழ்நாடு முக்கிய மையமாக விளங்குகிறது. நகரங்கள் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் நிறுவனத்தின் கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. இதை கருத்தில் கொண்டு, நிறுவனம் டீலர்கள், ஷோரூம் மற்றும் பணிமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள 'ஸ்விப்ட்' கார், பழைய மாடலை விட, கூடுதல் விலை கொண்டதாக இருக்கும். மேலும், பழைய மூன்று வண்ணங்களுடன், 'பிளே சிங் ரெட்' , 'டார்க் ப்ளூ', மற்றும் 'கிளிசனிங் கிரே' ஆகிய புதிய மூன்று வண்ணங்களுடன் இக்கார்கள் அறிமுகம் செய்யப் பட உள்ளன. இவ்வாறு ஸ்ரீவத்சவா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|