பதிவு செய்த நாள்
16 ஆக2011
03:41
புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு, 3,500 கோடி டாலராக (1 லட்சத்து 57 ஆயிரத்து 500 கோடி ரூபாய்), அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2010-11ம் நிதியாண்டில், நம்நாட்டில் மேற்கொள்ளப்பட்டஅன்னிய நேரடி முதலீடு,1,940 கோடி டாலர் (87 ஆயிரத்து 300 கோடி ரூபாய்) என்ற அளவில் மிகவும் குறைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பீ.பி. பிஎல்சி ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் போஸ்கோ நிறுவனம், இந்தியாவில் மேற்கொள்வதற்கான அன்னிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் போன்றவற்றால், அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்காவின் கடன் தகுதி குறியீடு 'ஏஏஏ' என்ற அளவிலிருந்து, 'ஏஏ+' ஆக குறைக்கப்பட்டது. இதனால், கடந்த ஒரு வார காலமாக, உலகின் பல்வேறு நாடுகளின் பங்கு வர்த்தகம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இருப்பினும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. இதனால், பல அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை பாதுகாப்பாக கருதுகின்றனர். எனவே, நடப்பு முழு நிதியாண்டில், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு, 3,500 கோடி டாலரை தாண்டும் என, ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், கே.பி.எம்.ஜி நிறுவனத்தின் செயல் இயக்குனர் கிரிஷன் மல்ஹோத்ரா தெரிவித்தார்.கடந்த 2008ம் ஆண்டில், அமெரிக்காவின் வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியால், அங்கு பல வங்கிகள் திவாலாகின. இதனால், அந்நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி, பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, 2008-09ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது. இருப்பினும், அதற்கு அடுத்த 2009-10ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக அதிகரித்தது. அதேசமயம், மேற்கண்ட இரண்டு நிதியாண்டுகளில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பின்னடைவை கண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 22ம் தேதியன்று, மத்திய அரசு, கிருஷ்ணா கோதாவரி படுகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், 'டீ-6' எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவில், பீ.பி. பிஎல்சி நிறுவனம், 30 சதவீத அளவிற்கு, முதலீடு மேற்கொள்வதற்கு அனுமதி அளித்தது. இதன் மதிப்பு, 720 கோடி டாலர் (32 ஆயிரத்து 400 கோடி ரூபாய்)ஆகும். இது, மிகப்பெரிய அன்னிய நேரடி முதலீடாகும். இதே போன்று, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஒரு சில கட்டுப்பாடுகளுடன், தென்கொரியாவைச் சேர்ந்த போஸ்கோ நிறுவனம், ஒடிசாவில் உருக்கு தொழிற்சாலை அமைப்பதற்கு கடந்த மே மாதம் ஒப்புதல் வழங்கியது. இதன் மதிப்பு 1,200 கோடி டாலர் (54 ஆயிரம் கோடி ரூபாய்) ஆகும். ஒரு மாதத்தில் மிக அதிகளவில் அன்னிய நேரடி முதலீட்டை இத்திட்டம் கவர்ந்துள்ளது.நடப்பு ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில், மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, கடந்தாண்டின் இதே மாதங்களை விட, முறையே 111 சதவீதம் மற்றும் 310 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த மே மாதம் 466 கோடி டாலர் (20 ஆயிரத்து 970 கோடி ரூபாய்) அளவிற்கும், ஜூன் மாதத்தில் இது, 555 கோடி டாலராகவும் (24 ஆயிரத்து 975 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. பல அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, மத்திய அரசு பன்முக சில்லரை வர்த்தகத்தில், அன்னிய நேரடி முதலீட்டிற்கான கொள்கைகளில் உள்ள இடர்பாடுகளை களைந்து, எளிமைப்படுத்த வேண்டும். அவ்வாறு, விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டால், நம்நாட்டில், மேற் கொள்ளப்படும் அன்னிய நேரடி முதலீடு மேலும் அதிகரிக்கும் என மல்ஹோத்ரா குறிப்பிட்டார். நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், அன்னிய நேரடி முதலீடு, 1,344 கோடி டாலராக (60 ஆயிரத்து 480 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், மேற் கொள்ளப்பட்ட முதலீட்டை விட, 133 சதவீதம் (577 கோடி டாலர்-25 ஆயிரத்து 965 கோடி ரூபாய்) அதிகமாகும். இருப்பினும், கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 1,943 கோடி டாலராக (87ஆயிரத்து 435கோடி ரூபாய்) குறைந்திருந்தது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டில், 2,560 கோடி டாலர் (1 லட்சத்து 15 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2008-09ம் நிதியாண்டில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 2,730 கோடி டாலராக (1 லட்சத்து 22 ஆயிரத்து 850 கோடி ரூபாய்) இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|