பதிவு செய்த நாள்
17 ஆக2011
09:31
நகரி : ஆந்திராவில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால், ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் தக்காளி விற்பனை மந்தமாக உள்ளதால், 1 கிலோ தக்காளி விலை மொத்த விற்பனை மார்க்கெட்டில் வியாபாரிகள், முதல் தர தக்காளி 2 முதல் 3 ரூபாய்க்கும், பழுத்து அழுகும் நிலையில் உள்ள தக்காளி கிலோ 1 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்தனர். தக்காளிகளை விற்பனை மார்க்கெட்டிற்கு கொண்டு வந்த விவசாயிகள், கிலோ தக்காளி 1 முதல் 3 ரூபாய்க்கு விற்க முன்வந்த போதிலும், மொத்த வியாபாரிகள் வாங்க முன்வரவில்லை. இதனால், மன வேதனைக்குள்ளான தக்காளி பயிர் செய்த விவசாயிகள், மார்க்கெட் அருகில் சாலை ஓரத்தில் தக்காளியை, குவியல் குவியலாகக் கொட்டிவிட்டு வீடு திரும்பினர். தக்காளி விவசாயிகள் பரிதாபத்திற்குள்ளான இச்சம்பவம், ஆந்திராவில் சித்தூர் மாவட்டம், மதனபள்ளி மொத்த மார்க்கெட் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. மதனபள்ளியைச் சுற்றியுள்ள கலிகிரி, பி.கொத்தகோட்டா, பீலேரு, மூலகலசெம்பு, குஞ்ஞம் கொண்டா, அங்கல்லூ, புங்கனூரு, பலமநேரு, கலகட போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தக்காளி பயிர் செய்கின்றனர். இப்பகுதியில் இருந்து தினமும், 500 டன் தக்காளி மதனபள்ளி விற்பனை மார்க்கெட்டிற்கு வருகிறது. இங்கிருந்து தமிழகம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த மாநிலங்களில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து விட்டதால், மதனபள்ளி மார்க்கெட் வியாபாரிகள் தக்காளியை வாங்க முன்வரவில்லை. தற்போது ஐதராபாத் மற்றும் கடற்கரை மாவட்டங்களுக்கு மட்டுமே, இங்கிருந்து தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், தக்காளியின் விலை மேலும் வீழ்ச்சியடைந்து விட்டதால், விலை கேட்பாரில்லை என்ற நிலை உருவாகி உள்ளது. தக்காளி விலை போகாத காரணத்தால், விவசாயிகள் மன வேதனையுடன், சாலை ஓரத்தில் கொட்டி விட்டுச் சென்ற தக்காளி குவியல்களை, இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாடுகளுக்கு உணவாக பயன்படுத்தலாம் என்ற எண்ணத்துடன், கூடை கூடையாக வாரிச் சென்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|