பதிவு செய்த நாள்
18 ஆக2011
00:06
சென்னை: விலைவாசி உயர்வை சமாளிக்கவும், பணவீக்க பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், எதிர்கால பாதுகாப்பு கருதியும் அதிக வருவாய் தரும் நிதியினங்களில் மக்கள் முதலீடு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், உலகளாவிய நெருக்கடியின் போது, உள்நாட்டில் ஏற்படும் பாதிப்பு காரணமாக முதலீடுகளின் மீதான வருவாய் குறைந்து போகிறது. பங்குச் சந்தை போன்றவற்றில் செய்யும் முதலீடு காணாமலே போய் விடுகிறது. சர்வதேச நெருக்கடியால், இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி கண்டு, முதலீட்டாளர்களின் பல லட்சம் கோடி ரூபாய் மாயமாகிப் போயுள்ளது. இத் தருணத்தில், எது பாதுகாப்பான முதலீடு என்று எழும் சிந்தனைக்கு ஆறு வழிகளில் விடை காண இக்கட்டுரை வழி காட்டுகிறது.கடந்த காலங்களில், கவர்ச்சிகரமான ஆபரணப் பொருளாக மட்டுமே அடையாளம் காணப்பட்டு வந்த தங்கம், தற்போது மிகச் சிறந்த சேமிப்புடன் அதிக அளவில் வருவாய் தரக்கூடியதாகவும் உருவெடுத்துள்ளது.தங்க ஆபரணங்கள்,'கோல்டு ஈ.டி.எப்', 'ஈ-கோல்டு' திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்,வங்கியின் குறித்த கால வைப்புத் தொகை உள்ளிட்டவற்றை விட கூடுதல் வருவாயை அளிக்கின்றன. எனினும், தற்போது தங்கத்தை விட அதிக வருவாய் தரக் கூடியதாக வெள்ளி உள்ளது. மின்னணு, கப்பல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன் விலை கிடு...கிடு... வென உயர்ந்து வருகிறது.அண்மையில், சர்வதேச முன்பேர சந்தையில் ஒரு கிலோ வெள்ளி 75 ஆயிரம் ரூபாய் (ஒரு அவுன்ஸ்-48.44 டாலர்) என்ற அளவிற்கு உயர்ந்து, தற்போது 58ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. அதனால் தற்போதைய நிலையில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம். கடந்த 2001ம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாயை தங்கம், வெள்ளி, பங்குகள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்திருந்தால், கடந்த 10 ஆண்டுகளில் இந்த முதலீடு எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டிருக்கும் என்பதை பார்க்கலாம்.வெள்ளியில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால், அது 835 சதவீதம் வளர்ச்சி கண்டு 9 லட்சத்து 35ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருக்கும். தங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 546 சதவீதம் உயர்ந்து 6 லட்சத்து 47ஆயிரம் ரூபாயாக பெருகியிருக்கும். இதே காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' 5 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதாவது, பங்குச் சந்தையில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது 414 சதவீதம் வளர்ச்சி கண்டு 5 லட்சத்து 14ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருக்கும். பங்குச் சந்தையில் வீழ்ச்சியும் அதைத் தொடர்ந்து ஏற்படும் எழுச்சியும் வாடிக்கை. அதனால், குறுகிய கால அடிப்படையில், முதலீடு மேற்கொள்பவர்களே இழப்பை சந்திக்கின்றனர். நீண்ட கால அடிப்படையில், வலுவான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வோர் நல்ல அளவில் வருவாய் ஈட்டுகின்றனர் என்பது இந்த மதிப்பீட்டில் இருந்து தெரியவருகிறது.பத்தாண்டுகளுக்கு முன்பு பிளேட்டினத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்திருக்கும்பட்சத்தில், அது, தற்போது 291 சதவீதம் வளர்ச்சி கண்டு 3லட்சத்து 91ஆயிரமாக உயர்ந்திருக்கும். இதே காலத்தில், வங்கிகளின் குறித்த கால வைப்புக் கணக்கில் செய்யப்பட்ட முதலீடு, 160 சதவீதம் என்ற அளவிற்கே வளர்ச்சி கண்டு, 2 லட்சத்து 60ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருக்கும். வைரம் விலை மதிக்க முடியாத பொருள்தான். ஆனால், முதலீடு என்ற வகையில், அது ஓரளவிற்கே வருவாயை அளித்திருக்கும். ஒரு லட்ச ரூபாய் முதலீடு, 51 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு 1 லட்சத்து 51ஆயிரம் ரூபாய் என்ற அளவிற்கே வருவாயை அளித்திருக்கும்.இதே காலத்தில், ரியல் எஸ்டேட் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடும் முதலீட்டாளர்களுக்கு நல்ல அளவில் வருவாயை வழங்கியுள்ளது. எனினும், சர்வதேச நெருக்கடியால், கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தில் காணப்படும் மந்தநிலை, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியையும் பாதித்துள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 -7 சதவீதம் என்ற அளவிற்கே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால், இதை சார்ந்தே ரியல் எஸ்டேட் துறை மீதான முதலீடுகளின் வருவாயும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பரஸ்பர நிதி திட்டங்களில், பங்கு சார்ந்த திட்டங்கள் அதிக இடர்பாடானவை. பங்குச் சந்தை எழுச்சி பெற்றால், இத்திட்டங்கள் மீதான முதலீட்டு வருவாய் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயரும். வீழ்ச்சி கண்டால், முதலீடே காணாமல் போகும்.அதனால், நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதென்றால் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம். முதலீட்டின் மீது தொடர்ந்து வருவாய் பெற வேண்டும் என்றால், கடன் பத்திரங்கள் சார்ந்த முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்யலாம். பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்தில் பாதிப்பு ஏற்படாமல், மாதாந்திர வருவாய் பெற வேண்டும் என்று எண்ணுவோர் பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.கடந்த ஓராண்டில், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய ரிலையன்ஸ் கோல்டு ஈ.டி.எப் திட்டம் 41 சதவீத வருவாயை வழங்கியுள்ளது. இன்கம் பண்டுகள் 9.6 சதவீதமும், பேலன்ஸ்டு பண்டுகள் 8 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயையும் வழங்கியுள்ளன.வங்கிகளின் குறித்த கால டிபாசிட் திட்டங்களில், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரையில் 10.5 சதவீத வருவாய் கிடைக்கிறது. மூத்த குடிமக்களின் டிபாசிட்டிற்கு கூடுதலாக 0.50 சதவீத வட்டியை வங்கிகள் வழங்குகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|