பதிவு செய்த நாள்
18 ஆக2011
12:37
திருப்பூர் : நெய்தல் அங்காடியில் மீன் விற்பனை அதிகரித்து வருகிறது. இதற்கு முன், வாரந்தோறும் 600 கிலோ மீன் மட்டுமே விற்பனையானது; தற்போது ஒரு டன்னாக அதிகரித்துள்ளது. தமிழக மீன்வளர்ச்சி துறை சார்பில் திருப்பூர் புஸ்பா தியேட்டர் அருகில், குமார் நகர், வீரபாண்டி, அவினாசி பகுதிகளில் மீன் விற்பனை செய்யும் நெய்தல் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. ஆழியாறு, பாலாறு, பவானி உள்ளிட்ட ஆறு அணைகளில் இருந்து ஆற்று மீன் கொண்டு வரப்பட்டு, விற்கப்படுகிறது. காலை 7.00 முதல் மதியம் 2.00 மணி வரை, பச்சை மீன்; மாலை 6.00 முதல் 10.00 மணி வரை மீன் வறுவல் விற்கப்படுகிறது. சுகாதாரமாகவும், விலை குறைவாகவும் இருப்பதால், சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பெரும்பாலானோர் நெய்தல் அங்காடிகளில் மீன் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். மீன்வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறியதாவது: மீன் விற்பனையை வரைமுறைப்படுத்தும் வகையில் நெய்தல் அங்காடிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. திருப்பூரில் முதல்கட்டமாக குமார் நகர், வீரபாண்டி பகுதிகளில் மீன் விற்பனையகம் துவங்கப்பட்டது; மக்களிடம் நல்ல வரவேற்பு ஏற்பட்டதையடுத்து, புஸ்பா தியேட்டர் பகுதி மற்றும் அவினாசியில் புதிதாகஅங்காடி அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் விற்பனை மிகவும் மந்தமாகவே இருந்தது; வாரந்தோறும் அதிகபட்சமாக 600 கிலோ மட்டுமே விற்பனையானது. வெளிமார்க்கெட்களில் மீன் விலை அடிக்கடி ஏற்றம் பெறும். கட்லா, ரோகு, மிர்கால் உள்ளிட்ட அனைத்து ரக மீன்களும் ஆற்றுப்பகுதிகளில் இருந்து தட்டுப்பாடு இன்றி கிடைப்பதால், நெய்தல் அங்காடியில் விலை எப்போதும் சீராகவே இருக்கிறது. சுகாதாரம், குறைந்த விலை காரணமாக நெய்தல் அங்காடியில் மீன் வாங்க நுகர்வோர் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது மீன் விற்பனை அதிகரித்துள்ளது; நான்கு அங்காடியிலும் சேர்த்து, வாரந்தோறும் ஒரு டன் மீன் விற்பனையாகிறது. அதிகளவில் வரவேற்பு ஏற்பட்டுள்ளதால், திருப்பூரில் கூடுதல் அங்காடிகள் திறப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம், என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|