பதிவு செய்த நாள்
23 ஆக2011
00:18
புதுடில்லி: சர்வதேசளவில், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில், இந்தியா சிறந்து விளங்குவதாக, பிரதமர் மன்மோகன்சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார் கோரக்பூர் ஐ.ஐ.டி பட்டமளிப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளது. வேளாண்துறையின் முழுமையான ஆற்றலை பயன்படுத்துவது, கட்டுமானம் மற்றும் நிதியினங்களுக்கான வலுவான அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது, மின் சக்தி உற்பத்தியில் தன்னிறைவு, எரிசக்திக்கு சமச்சீர் விலை கிடைக்கச் செய்வது உள்ளிட்டவை, நமது பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக விளங்குகின்றன.இருந்தபோதிலும், உலகளவில், வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நாடுகளில் ஒன்றாக, இந்தியா உருவெடுத்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை, உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. சர்வதேச அரங்கில், இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன.ஒரு காலத்தில், இந்தியப் பொருளாதாரம் ஒரு வட்டத்திற்குள்ளேயே இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை. வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் என இரு துறைகளிலும், தாராள முதலீடுகள் குவிகின்றன. அன்னிய நேரடி முதலீட்டிற்கு மிகச் சிறந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.நடப்பு 2011-12ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், நம் நாடு 1,340 கோடி டாலர் அளவிற்கு, அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை விட, 133 சதவீதம் அதிகமாகும். சர்வதேச பொருளாதாரம் நிலையில்லாமல் உள்ளது. இந்த நிலையிலும், இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 21ம் நூற்றாண்டு 'ஆசிய' நூற்றாண்டாகும். ஏனென்றால், தொழில் வளர்ச்சி பெற்ற மேற்கத்திய நாடுகளின் பொருளாதார வல்லமை, சிறப்பு மிக்க ஆசிய நாடுகளின் பக்கம் இடம் பெயர்ந்துள்ளது.இத்தகைய மாற்றத்திற்கு, இந்தியா முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நிறுவனங்கள், அயல்நாடுகளில் கால்பதித்து முதலீடுகளையும், கையகப்படுத்தும் திட்டங்களையும் மேற்கொண்டு வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகின்றன. இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|