பதிவு செய்த நாள்
24 ஆக2011
12:57
சென்னை : சர்வதேச சந்தையில் தங்கத்துக்கு தொடர்ந்து மவுசு அதிகரித்து வருவதால், விலையில் தினம் ஒரு மாற்றத்தை சந்தித்து வருகிறது. தொடர்ந்து ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், நகைக் கடைகளில் தங்க நாணயத்தின் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. தங்கம் விலை, 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. சில மாதங்களாக, நிமிடத்துக்கு நிமிடம் தங்கம் விலையில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நேற்று, சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 2,661 ஆகவும், ஒரு சவரன் 21 ஆயிரத்து 228 ரூபாயாகவும் இருந்தது. மாலையில் மார்க்கெட் முடிவடையும் நிலையில் கிராமுக்கு 30 ரூபாயும், சவரனுக்கு 240 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டு, கிராம் 2,631 ரூபாய்க்கும், சவரன் 21 ஆயிரத்து 048 ரூபாய்க்கும் விற்றது. இந்திய ரூபாய்க்கு இணையான அமெரிக்க டாலரின் மதிப்பு, 45.01 ஆக அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் தங்கத்தின் அளவில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தைக்கு விற்பனைக்கு வரும் தங்கத்தின் அளவு, 35 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரிய தங்க மார்க்கெட்டுகளான சென்னை, கோவை நகரங்களில் தங்க நாணயங்களை விற்பனை செய்து வந்த டீலர்கள், தற்காலிகமாக நாணய வினியோகத்தை நிறுத்திவிட்டனர். அத்துடன், மாவட்ட தலைநகரங்கள், தாலுக்காக்களில் செயல்பட்டு வந்த தங்க நகைக் கடைகளில் உரிமையாளர்கள், தாங்கள் வைத்திருந்த தங்க நாணயங்களின் விற்பனையை நிறுத்திவிட்டனர். ஆபரண தங்கம், தங்கக் கட்டி ஆகியவற்றை மட்டுமே விற்பனை செய்கின்றனர். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாணய தயாரிப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டதே, தங்க நாணய விற்பனை முடக்கத்துக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர். தங்க நாணயத்தின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ள நிலையிலும், தங்கத்தின் விலை மேலும் உயரும் என, தகவல் பரவி வருவதால், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|