பதிவு செய்த நாள்
25 ஆக2011
00:09
மும்பை: தற்போது,பொதுத்துறை வங்கிகளில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவி, ஒருவரிடமே உள்ளது. இதனை, இருவருக்கு பிரித்தளிக்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.மும்பையில், பிக்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இணைந்து நடத்திய கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் டீ. சுப்பாராவ் கூறியதாவது:பொதுத்துறை வங்கிகளில், தற்போது, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவி பிரிக்கப்படாமல், ஒருவரே நிர்வகிக்கும் நிலை உள்ளது. இதனை, இருவர் நிர்வகிக்கும் வகையில், பிரித்தளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2004-05ம் ஆண்டில், ஏ.எஸ். கங்குலி தலைமையில், இப்பதவி குறித்து ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு, தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவியை, இரண்டாக பிரித்தளிக்கும் வகையில், பரிந்துரை செய்தது. கடந்த 2007ம் ஆண்டில், தனியார் துறை வங்கிகளில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளை இருவர் வகிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொண்டது.இதற்கு, சிறப்பான வரவேற்பு இருந்தது. இதே திட்டத்தை, பொதுத்துறை வங்கிகளிலும், அமல்படுத்துவதன் மூலம், பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடு மேம்படும்.ஒருவரிடமே, அதிக அளவிலான, அதிகாரங்களும், பொறுப்புகளும் இருப்பதால், பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்படுகிறது. இப்பதவிகளை பிரித்தளிப்பதன் வாயிலாக, வங்கி சேவை சிறந்த அளவில் மேம்படும்.இதற்கு எடுத்துக்காட்டாக, பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இவ்வங்கியின் தலைவர் பொறுப்பை ஒருவரும், நிர்வாக இயக்குனர் பொறுப்பை நான்கு பேரும் ஏற்றுள்ளனர். இதனால், இவ்வங்கி திறம்பட நிர்வகிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.நிறுவனங்கள், வங்கி துறையில் ஈடுபடுவது குறித்து, எழுந்த கேள்விக்கு, பதிலளித்து பேசிய சுப்பாராவ், ' நிறுவனங்கள் வங்கி துறையில் ஈடுபடுவதற்கு அனுமதி அளிப்பதற்கு முன்பாக, வங்கிகளுக்கான சட்ட விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.இதற்கான வரைவுதிட்டம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் அனுமதி கிடைத்த பிறகுதான், நிறுவனங்கள் வங்கி சேவையில் ஈடுபடுவது குறித்து முடிவெடுக்க முடியும்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|