பதிவு செய்த நாள்
25 ஆக2011
00:09
மும்பை: உள்நாட்டில், சிமென்ட்மற்றும் உருக்கு பொருள்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே, இனி வரும் மாதங்களில், இவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (சி.எம்.ஐ. இ) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது, பல மாநிலங்களில், பருவமழை முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து, இம்மாநிலங்களின் கட்டுமான நடவடிக்கைகளில் விறு விறுப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நடப்பாண்டு மே மாதம் முதல் மும்பை, டில்லி, கோல்கட்டா நகரங்களில் சிமென்ட் பயன்பாடு குறைந்திருந்தது. இதனால், மும்பையில், சென்ற ஜூலை மாதத்தில், 50 கிலோ கொண்ட சிமென்ட் மூட்டையின் விலை, 276 ரூபாயாக குறைந்திருந்தது.இது, ஏப்ரல் மாதத்தில், 283 ரூபாய் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது. இதே போன்று, டில்லியில், சென்ற ஜூலை மாதத்தில், ஒரு மூட்டை சிமென்ட்டின் விலை, 256 ரூபாயாகவும் ( ஏப்ரலில் 261 ரூபாய்), கோல்கட்டாவில் 247 ரூபாயாகவும் (மார்ச் மாதத்தில் 298 ரூபாய்) குறைந்துள்ளது.இருப்பினும், தென்மாநிலங்களில், சிமென்ட்டின் விலை அதிக ஏற்ற இறக்கமின்றி இருந்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் ஐதராபாத் நகரங்களில், சென்ற ஏப்ரல் மாதத்தில் நிலவிய விலையிலேயே ஜூலையிலும் சிமென்ட் விற்பனையானது.கடந்த ஜூலையில் விற்பனைக்கு அனுப்பப்பட்ட சிமென்ட், இரட்டை இலக்க அளவிற்கு வளர்ச்சி கண்டு, 10.1 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. அதேசமயம், கடந்த 2010ம் ஆண்டு ஜூலையில், கடுமையான மழையால், இது, 3.9 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்திருந்தது.உருக்கு உற்பத்தி, விற்பனை: வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், உருக்கு பொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என சி.எம்.ஐ. இ அமைப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இரும்புத் தாது உற்பத்தி குறைந்துள்ளது.குறிப்பாக, கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து இரும்புத் தாது வெட்டியெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள, உருக்கு நிறுவனங்களின் உற்பத்தி மிகவும் பாதிப்படைந்துள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், உருக்கு பொருள்களின் விலை சராசரியாக 7 சதவீதம் என்ற அளவில், அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இவற்றின் விலை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. இருப்பினும், நடப்பாண்டில், உருக்கு உற்பத்தி 12 சதவீதம் என்ற அளவிலிருந்து, 9.5 சதவீதமாக குறையும் என்ற மதிப்பீடும் உள்ளது.உற்பத்தி குறைந்து தேவை அதிகரிக்கும் நிலையில், இவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது என, சி.எம்.ஐ. இ. அமைப்பு அதன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.என். நெருக்கர் கூறுகையில்,'நடப்பு நிதியாண்டில், உருக்கு பொருள்களுக்கான தேவை 9 சதவீதம் என்ற அளவில் இருக்கும். எனவே, நடப்பு நிதியாண்டில், தேவை மற்றும் அளிப்பை பொறுத்து ஒரு டன் உருக்கு பொருள்களின் விலை 1,000 ரூபாய் உயரும் அல்லது குறையும்' என்று தெரிவித்தார்.இதற்கிடையே, சென்ற ஜூலை மாதத்தில், உள்நாட்டின் உருக்கு உற்பத்தி , கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 6.3 சதவீதம் அதிகரித்து 61.60 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூலை மாதத்தில் 57.90 லட்சம் டன்னாக இருந்தது.இதே மாதங்களில் உலகளவில், உருக்கு உற்பத்தி, 11.5 சதவீதம் அதிகரித்து, 11.40 கோடி டன்னிலிருந்து, 12.70 கோடி டன்னாக உயர்ந்துள்ளது என உலக உருக்கு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த ஜூலையில், சீனாவின் உருக்கு உற்பத்தி, 15.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5.93 கோடி டன்னாக உயர்ந்திருந்தது. இதைத்தொடர்ந்து, ஜப்பானில் உருக்கு உற்பத்தி, 91 லட்சம் டன்னாகவும், அமெரிக்காவின் உற்பத்தி, 74.50 லட்சம் டன்னாகவும் இருந்தது.நடப்பு 2011ம் ஆண்டு, ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாத காலத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, கடந்தாண்டின் இதே காலத்தை விட, 7 சதவீதம் அதிகரித்து, 3.98 கோடி டன்னிலிருந்து, 4.18 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், சர்வதேச அளவில், உருக்கு பொருள்கள் உற்பத்தி, 8.3 சதவீதம் வளர்ச்சி கண்டு, 81.90 கோடி டன்னிலிருந்து, 88.60 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.இந்தியாவில் உள்ள உருக்காலைகளின் உற்பத்தி திறன் 8 கோடி டன் என்ற அளவில் உள்ளது. தற்போதைய நிலையில், உருக்கு உற்பத்தியில் இந்தியா 4 வது இடத்தில் உள்ளது. வரும் 2013ம் ஆண்டில், இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்.அப்போது, இந்திய நிறுவனங்களின் உருக்கு உற்பத்தி திறன் 12 கோடி டன்னாக இருக்கும் என, மத்திய உருக்கு துறை அமைச்சர் பென்னி பிரசாத் வர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|