பதிவு செய்த நாள்
27 ஆக2011
02:50
மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளில், பங்கு வியாபாரம், மிகவும் மந்தமாக இருந்தது. இந் நிலையில், பரஸ்பர நிதி நிறுவனங்களும், சில்லரை முதலீட்டாளர்களும், அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். உணவுப் பணவீக்கம் அதிகரிப்பால் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை மேலும், அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்து போனது. வெள்ளியன்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், உலோகம், மின்சாரம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், தகவல் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 297.50 புள்ளிகள் சரிவடைந்து, 15,848.83 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16, 256. 38 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்ச மாக, 15,765.53 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஹீரோமோட்டோ கார்ப், மகிந்திரா அண்டு மகிந்திரா, இன்போசிஸ் ஆகிய மூன்று நிறுவனப் பங்குகள் தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 91.80 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 4,747.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,872 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,720 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|