பதிவு செய்த நாள்
27 ஆக2011
02:51
புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், பெட்ரோலியப் பொருட்களை சந்தைப்படுத்தும், மூன்று பொதுத்துறை நிறுவனங்களுக்கு, 1 லட்சத்து, 21 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, மத்திய எண்ணெய் துறை அமைச்சர் எஸ்.ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார்.பொதுத்துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவை, அடக்க விலைக்கும் குறைவாக விற்பனை செய்து வருகின்றன. இதனால், இந்நிறுவனங்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 235 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டத்தில் அமைச்சர் கூறினார்.அண்மையில், மத்திய அரசு, டீசல் (லிட்டருக்கு ரூ.3), மண்ணெண்ணெய் (லிட்டருக்கு ரூ.2), சமையல் எரிவாயு (ஒரு சிலிண்டருக்கு ரூ.50) போன்றவற்றின் விலையை உயர்த்தியது. மேலும், இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. டீசல் மீதான உற்பத்தி வரி, லிட்டருக்கு 2.60 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையிலும், இந்நிறுவனங்களுக்கு, இழப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய, நிலையில், இந்நிறுவனங்களுக்கு, ஒரு லிட்டர் டீசல் விற்பனையில் 4.97 ரூபாயும், பொது வினியோகத் திட்டத்தின் வாயிலாக விற்கப்படும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெயில் 23.74 ரூபாயும், ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயு விற்பனையில், 247 ரூபாயும் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசுக்கு, இறக்குமதி வரி மற்றும் உற்பத்தி வரி குறைப்பால், ஆண்டுக்கு, 49 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், அரசு, அதிகளவில் தொகையை ஒதுக்க வேண்டியுள்ளது.எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பால், இவற்றிற்கு அதிக நிதிச்சுமை ஏற்படுவதுடன், நடைமுறை மூலதனம், விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரிக் கிறது. அதேசமயம், மக்கள் நலன் கருதியும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், மேற்கண்ட மூன்று பெட்ரோ லிய பொருட்களை, அடக்க விலைக்கும் குறைவாக விற்க வேண்டியுள்ளது.கடந்த 2010ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை, மத்திய அரசு நீக்கியது. இதன்படி, சந்தை நிலவரத்திற்கேற்ப, பெட்ரோல் விலையைநிர்ணயித்துக் கொள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அது முதல், இதுவரை யிலுமாக, பெட்ரோல் விலை, 21 சதவீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|