பதிவு செய்த நாள்
27 ஆக2011
09:52
தமிழகத்தில் மொத்தமிருக்க வேண்டிய, 43 ஆயிரத்து, 396 வருவாய்த் துறை பணியிடங்களில், 9,409 பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாநில அரசின் நலத் திட்டங்கள் தொய்வடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனில் ஆரம்பித்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு வரை, தமிழக அரசில் மொத்தம், 37 துறைகள் உள்ளன. இவற்றில், அரசுப் பணிகளின் தலையாய துறையாகத் திகழ்வது வருவாய்த் துறை.கிரைண்டர், மிக்சி, இன்ன பிற என அரசு வழங்கும் நலத்திட்டங்கள், இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், சுனாமி முதலான பேரிடர் மேலாண்மை, பட்டா, சிட்டா, அடங்கல் கொண்ட நில நிர்வாகம், நிலச் சீர்திருத்தம், நில வரி, மாவட்ட நிர்வாகம் என, அத்தனை பணிகளும், இந்தத் துறையின் கீழ் தான் அமைந்துள்ளன. புரியும்படியாக சொல்வதானால், ஜாதிச் சான்றிதழ், ரேஷன் கார்டு என ஒவ்வொன்றுக்கும் நடையாய் நடக்க வைப்பார்களே, அது தான் வருவாய்த் துறை. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு, கிராம உதவியாளர் முதல், மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ.,) வரை பல்வேறு நிலைகளில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 43 ஆயிரத்து 396 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.கடந்த ஜூன் மாத நிலவரப்படி, துணை ஆட்சியர்(டெபுடி கலெக்டர்) மட்டத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 455. இருப்பது 386. வட்டாட்சியர் (தாசில்தார்) மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் 3,047 இடத்துக்கு, 2,767 பேர் தான் இருக்கின்றனர். உதவியாளர் மற்றும் வருவாய் ஆய்வாளர் (ஆர்.ஐ.,) பணிக்கு 6,650 பேருக்கு பதிலாக, 3,639 பேர் தான் உள்ளனர்.கிராம நிர்வாக அலுவலராக (வி.ஏ.ஓ.,) 12,507 பேர் இருக்க வேண்டும். இருப்பதோ, 7,948 பேர் தான். இறுதியாக, கிராம உதவியாளர் பணியிடத்தில் 701 பேரும், இதர பணியிடங்களில் 789 பேரும் குறைவாக உள்ளனர். ஒட்டுமொத்தத்தில், 43 ஆயிரத்து 396 பணியிடத்தில், 33 ஆயிரத்து 987 பேர் பணியில் உள்ளனர். 9,409 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாநிலத் தலைவர் சிவகுமார் கூறியதாவது:ஒரு தாலுகாவில், சராசரியாக ஒரு லட்சம் ரேஷன் கார்டுகள் இருக்கின்றன. ஆனால், வட்ட வழங்கல் அலுவலகத்தில் இரண்டு உதவியாளர்கள் தான் இருப்பர். அவர்களை வைத்து தான் ரேஷன் கார்டு புதுப்பித்தல், சரிபார்த்தல், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட அத்தனை பணிகளையும் பார்க்க வேண்டியிருக்கிறது. தினம் நூற்றுக்கும் மேற்பட்ட புதுப்புது விண்ணப்பங்கள் வருகின்றன. தாலுகா அலுவலகங்களிலும் இதே நிலைமை தான். வி.ஐ.பி., வரவேற்பு, சுனாமி, சட்டம், ஒழுங்கு என எந்த விஷயமாக இருந்தாலும் வருவாய்த் துறையினர் தான் நேரடியாகக் களமிறங்கிச் செயல்பட வேண்டியுள்ளது.ஆனால், 1960ம் ஆண்டின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியிடங்கள் தான் இப்போதும் உள்ளன. அந்த காலகட்டத்தை விட 200சதவீதம் அதிகம் மனுக்கள் வரும் இந்தக் காலத்திலும் அதே பணியிடங்கள் தொடர்வதும், அவற்றில் பெரும்பாலானவை காலியாக இருப்பதும், அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தும். எனவே, காலியாக இருக்கும் பணியிடங்களையாவது தமிழக அரசு, போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.இவ்வாறு சிவகுமார் கூறினார். 'இந்த காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என தமிழக அரசும் தெரிவித்துள்ளது. ஆனால், என்ன நடவடிக்கை என்றோ, எப்போதுக்குள் நிரப்பப்படும் என்றோ, பணியிடம் அதிகரிக்கப்படுமா என்பது பற்றியோ எந்தத் தகவலும் இல்லை. இருக்கிற திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்துவது மட்டுமின்றி, கிரைண்டர், மிக்சி, ஆடு மாடு என பல்வேறு இலவசத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு, வருவாய்த் துறை ஊழியர்களுக்கு இருக்கிறது. குறிப்பாக, இலவசமாக ஆடு, மாடுகள் வழங்கும் பணி, மிகப் பெரிய சவாலாக அமையப்போகும் ஒன்று. இத்தகைய சூழ்நிலையில் 9,400 பணியிடங்கள் காலியாக விடப்பட்டுள்ளதால், அரசுத் திட்டங்கள் தொய்வின்றி மக்களைச் சென்றடையுமா என்பது கேள்விக்குறியே.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|