பதிவு செய்த நாள்
28 ஆக2011
03:44
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, ஆகஸ்ட் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 160 கோடி டாலர் (7,360 கோடி ரூபாய்)அதிகரித்து, 31 ஆயிரத்து 822 கோடி டாலராக (14 லட்சத்து 63 ஆயிரத்து 812 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 12ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 62 கோடியே 10 லட்சம் டாலர் (2,795 கோடி ரூபாய்) சரிவடைந்து, 31 ஆயிரத்து 661 கோடி டாலராக (14 லட்சத்து 24 ஆயிரத்து 745 கோடி ரூபாய்)குறைந்து காணப்பட்டது. நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, தொடர்ந்து இரண்டு வாரங்களாக சரிவடைந்து வந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு,1 கோடியே 20 லட்சம் டாலர் (55 கோடி ரூபாய்) அதிகரித்து, 298 கோடியே 70 லட்சம் டாலராக ( 13 ஆயிரத்து 740 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. எஸ்.டீ.ஆர் மதிப்பும், 1 கோடியே 90 லட்சம் டாலர் (87 கோடி ரூபாய்) அதிகரித்து, 463 கோடி டாலராக (21 ஆயிரத்து 298 கோடி ரூபாய்) உயர்வடைந்துள்ளது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் எந்தவித மாற்றமும் இல்லாமல், 2,535 கோடி டாலராக உள்ளது. மதிப்பீட்டு வாரத்தில், நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, மதிப்பின் அடிப்படையில், 158 கோடி டாலர் (7,268 கோடி ரூபாய்) உயர்ந்து, 28 ஆயிரத்து 525 கோடி டாலராக (13 லட்சத்து 12 ஆயிரத்து 150 கோடி ரூபாய் ) அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான, யூரோ, ஸ்டெர்லிங்,யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளிமதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.இதனிடையே, அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் பென் பெர்னன்கி, அந்நாட்டின் பொருளாதார நிலை குறித்து விளக்கமளித்துள்ளார். இதையொட்டி வரும் வாரங்களில், ரூபாயின் மதிப்பில் மாறுதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|