பதிவு செய்த நாள்
04 செப்2011
03:55
நடப்பு வார தொடக்கத்தில் பங்குச் சந்தையில், ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டது. இது, சிறிய முதலீட்டாளர்கள் மத்தியில், நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜான் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள், பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. ஆக, மூன்று நாட்கள் நடை பெற்ற பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. முந்தைய வாரத்தில், 'சென்செக்ஸ்' 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவடைந்து, முதலீட்டாளர்களை கலவரத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், நடப்பு வாரத்தில் சந்தை, 16,000 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்து, 17,000 புள்ளிகளை எட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்த வார ஏற்றம் எதனால்? இவ்வாரத்தில், உலகளவில் பிரச்னைகள் அதிகம் இல்லாததால், பங்குகளில் முதலீடு செய்தவர்களின், எண்ணிக்கை அதிகரித்தது. இச்சூழ்நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.7 சதவீதமாக குறைந்துள்ளது என்ற செய்தியும், உணவுப் பொருள் பணவீக்கம், 10.05 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ற தகவலும், சந்தையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவ்விரு தினங்களிலும், வர்த்தகம் நன்றாகவே இருந்தது. வெள்ளியன்று இறுதியாக, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 145 புள்ளிகள் அதிகரித்து, 16,821 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 39 புள்ளிகள் உயர்ந்து 5,040 புள்ளிகளிலும் முடிவடைந்தன. கடந்த வாரத்தை விட, 'சென்செக்ஸ்' மொத்தம் 973 புள்ளிகள் உயர்ந்திருந்தது. 16,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிவடைந்திருந்த போது, பங்குகளை வாங்கியவர்களுக்கு, தற்போது நல்ல அளவில் லாபம் கிடைத்திருக்கும். திங்களன்று 'சென்செக்ஸ்' 567 புள்ளிகள் அதிகரித்தது என்பது, இவ்வாண்டில் ஏற்பட்ட அதிக ஏற்றங்களுள் இதுவும் ஒன்றாகும். புதிய வெளியீடுகள்: பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள், பல்வேறு காரணங்களால், தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. இதனால், அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. தற்போது, பங்கு வர்த்தகம் ஓரளவிற்கு சூடுபிடித்துள்ளது. எனவே, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நடப்பு மாதத்தில், 20 அல்லது 27ம் தேதி பங்கு வெளியீட்டை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பங்குகளின், வெளியீட்டு விலையை பொறுத்து, இப்பங்கு வெளியீட்டில், சிறிய முதலீட்டாளர்கள் பங்கேற்பது குறித்து முடிவு செய்யலாம். தங்கம்: ஐரோப்பிய நாடுகளின், கடன் பிரச்னை பெரிதாகிக் கொண்டே வருகிறது. இதனால், அந்நாடுகள் இருப்பில் உள்ள தங்கத்தில், ஒரு பகுதியை விற்கும் முடிவில் உள்ளன. அவ்வாறு விற்கப்பட்டால், 750 டன் தங்கம் விற்பனைக்கு வரும். ஆனால், அதன் மூலம் கிடைக்கும் பணம், அந்நாடுகளின் பிரச்னைக்கு, 'யானைப் பசிக்கு சோளப் பொரி' போன்ற நிலைதான். இதனால், அந்நாடுகள் தங்கம் விற்பது குறித்து, யோசித்து வருகின்றன. அந்நாடுகள், தங்கத்தை விற்கும் நிலையில், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவும் தனது தங்க இருப்பிலிருந்து, ஒரு பகுதியை விற்பனை செய்து, அதை நாட்டின் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என, ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால், இதற்கு பலத்த எதிர்ப்பு உள்ளது. புதிய வங்கிகள்: தனியார் நிறுவனங்கள், வங்கி தொடங்குவதற்கான வரைவுத் திட்டத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டு, கருத்துக்களை கேட்டுள்ளது. இதன்படி, பல பெரிய நிறுவனங்கள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் வங்கிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம். இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, பல வங்கி சாரா நிதி நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் அதிகரித்தது. குறிப்பாக, ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனப் பங்கின் விலை, 590 லிருந்து 673 ரூபாயாக அதிகரித்தது. மணப்புரம் பைனான்ஸ் நிறுவனப் பங்கின் விலை, 42 லிருந்து 56 ரூபாயாக உயர்ந்தது. வீட்டு வசதிக் கடன்: பணவீக்க உயர்வால், வட்டி விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இதனால், வீட்டுக் கடன் வாங்கியிருப்பவர்களால், கடனை திரும்பக் கட்ட முடியாத சூழ்நிலை உருவாகும் அல்லது திரும்பச் செலுத்துவதில் தாமதம் ஏற்படும். பணவீக்கம் குறைந்து, வட்டி விகிதங்கள் குறைய வேண்டும். அப்போது தான், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்படும். அனாவசிய செலவுகளை குறைத்தாலே, பணவீக்கம் குறையத் தொடங்கும். கடன் வாங்குவதும் குறையும். இதைத்தொடர்ந்து, வட்டி விகிதங்கள் தாமாகவே குறைந்து விடும். வரும் வாரம் எப்படி இருக்கும்? உலகளவில், பிரச்னைகள் சிறிது அடங்கியுள்ளன. இதனால், பங்குச் சந்தைகளில் மீண்டும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏற்றம், பல முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. வரும் வாரத்திலும், பங்கு வர்த்தகத்தில், சிறிது முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அது, சந்தையை மேலும் பலப்படுத்தும். சேதுராமன் சாத்தப்பன்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|