பதிவு செய்த நாள்
08 செப்2011
04:43
புதுடில்லி : ஹீரோ குழுமம், கூர்கானில் ஐந்து நட்சத்திர சொகுசு ஓட்டல் ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து, 3.90 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. இந்த நிலப் பகுதியில், அடுத்த 12 மாதங்களுக்குள் கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் முஞ்சால் தெரிவித்தார். முதல் கட்டமாக இந்நிறுவனம், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, 105 கோடி ரூபாய் அளித்துள்ளது. ஆனால், நிலம் என்ன தொகைக்கு வாங்கப்பட்டது என்பது குறித்து முஞ்சால் தெரிவிக்கவில்லை. ஹீரோ குழுமம் கூர்கானில், நிர்மாணிக்க உள்ள ஓட்டல், 650 கோடி ரூபாய் திட்டச் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான தொகை அனைத்தையும் ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஓட்டல் 279 அறைகளுடன் பல்வேறு நவீன வசதிகளுடன் உருவாக்கப்படும். ஓட்டலின் கட்டுமான நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு ஓட்டல் நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில், ஒப்படைக்கப்படும். இதற்காக சர்வதேச அளவில், ஓட்டல் துறையில் முன்னணியில் உள்ள போர் சீஸன்ஸ், ஜே.டபிள்யூ. மாரியாட் மற்றும் கான்ராட் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என, முஞ்சால் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|