பதிவு செய்த நாள்
10 செப்2011
00:29
புதுடில்லி:கம்ப்யூட்டர், லேப்-டாப், நோட்புக், நோட் பேட் போன்ற சாதனங்களின் விற்பனை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை 35 சதவீதம் வளர்ச்சி கண்டு, ஒரு கோடியே, 26 லட்சமாக உயரும் என்று, எம்.ஏ.ஐ.டி - ஐ.எம்.ஆர்.பீ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 93 லட்சத்து, 10 ஆயிரம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. இது, கடந்த 2009-10ம் நிதியாண்டை விட, 16 சதவீதம் (80 லட்சத்து, 30 ஆயிரம் கம்ப்யூட்டர்கள்) அதிகம் என, தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையிலும், கம்ப்யூட்டர்கள் விற்பனை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், ஆண்டு கணக்கின் அடிப்படையில் ஒப்பிடும் போது, இதன் வளர்ச்சி விகிதம், 2 சதவீதம் சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.சென்ற 2010-11ம் நிதியாண்டின் மொத்த கம்ப்யூட்டர்களின் விற்பனையில், 'டெஸ்க்டாப்' எனப்படும்,சாதாரண கம்ப்யூட்டர்களின் பங்களிப்பு, 9 சதவீதம் வளர்ச்சி கண்டு, 60 லட்சத்து, 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 55 லட்சத்து, 20 ஆயிரமாக இருந்தது. இது தவிர, லேப்-டாப் எனப்படும் மடி கம்ப்யூட்டர்கள் மற்றும் நெட்புக் எனப்படும் சிறிய வகை லேப்-டாப்களின் விற்பனை, 33 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 31 சதவீதம் (25 லட்சம் ) அதிகமாகும். இது குறித்து, தகவல் தொழில்நுட்பசாதனங்கள் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்தீப் நாயர் கூறும்போது, 'ஹார்டுவேர் எனப்படும் தகவல் தொழில்நுட்ப வன் பொருட்கள் விற்பனை, சிறப்பான அளவில், வளர்ச்சி கண்டு வருகிறது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், சந்தையில், அனைத்து வகையான ஹார்டுவேர் பொருட்களுக்கும், நல்ல அளவில் தேவைப்பாடு உயர்ந்துள்ளதை காண முடிந்தது. எனவே, ஹார்டுவேர் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தயாரிப்பாளர்கள் சென்ற நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில் விற்பனை சிறப்பாக இருக்கும் என கருதுகின்றனர்' என்று தெரிவித்தார். வரும் 2011-12ம் நிதியாண்டில், நாட்டில் கம்ப்யூட்டர்கள் விற்பனை, 35 சதவீதம் வளர்ச்சி காணும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர்கள் விற்பனை 1 கோடியே, 26 லட்சத்தை தாண்டும் என, நாயர் மேலும் கூறினார். கம்ப்யூட்டர்களின் விற்பனை வளர்ச்சிக்கு, வீடுகளின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. குடும்பங்களில், குழந்தைகளின் கல்விக்காக கம்ப்யூட்டர்கள் வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இருப்பினும், வட்டி விகித உயர்வு, மொத்த கம்ப்யூட்டர்களின் விற்பனையில், பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறினார். வீடுகளில் பயன்படுத்தப்படும், ஒட்டு மொத்த கம்ப்யூட்டர்கள் பயன்பாட்டில், லேப்-டாப் மற்றும் நெட்புக் எனப்படும், மினி லேப்-டாப்களுக்கான பங்களிப்பு முறையே, 57 சதவீதம் மற்றும் 75 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மேலும், வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கான, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் விற்பனை, தலா 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையால், நிறுவனங்களுக்கான கம்ப்யூட்டர் விற்பனை, வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் விற்பனையில், öŒர்வர் விற்பனையை தவிர, பிரிண்டர், வலைப்பின்னல் சேவைக்கான சாதனங்கள், இணையதள இணைப்பு மற்றும் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது. செர்வரின் விற்பனை, 11 சதவீதம் சரிவைச் சந்தித்து, 87 ஆயிரத்து, 275 ஆக குறைந்துள்ளது. இந்த விற்பனை, கடந்த நிதியாண்டில், 1 லட்சத்து, ஆயிரத்து 827 ஆக அதிகரித்து காணப்பட்டது.சென்ற நிதியாண்டில், ஒட்டுமொத்த பிரிண்டர்களின் விற்பனை, 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 28 லட்சத்து, 70 ஆயிரமாக உயர்ந்துள்ளது.நடப்பு 2011ம் மார்ச் மாத நிலவரப்படி, இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 6 சதவீதம் உயர்ந்து, ஒரு கோடியே, 30 லட்சத்தை தாண்டியுள்ளது என, நாயர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|