பதிவு செய்த நாள்
10 செப்2011
10:31
சென்னை: பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், 'கோ-ஆப்டெக்ஸ்' நிறுவனத்தில், தீபாவளி ஜவுளி வாங்குவதற்கு, வங்கிகள் மூலம், கடன் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், 'கோ-ஆப்டெக்ஸ்' நிறுவனத்தில், ஜவுளி கடன் பெறும் வசதி இருக்கிறது. இவர்கள் வாங்கும் ஜவுளிக்கான தொகை, தவணை முறையில், சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு, 'கோ-ஆப்டெக்ஸ்' நிறுவனத்திற்கு வழங்கப்படும்.அரசு ஊழியர்களின் ஜவுளிக் கடன், ஒரு மாதத்திற்குள் வந்து விடும். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வாங்கிய ஜவுளிக் கடன் தொகை மாதா, மாதம் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்வதில் தாமதம் காட்டுகின்றன. பல நிறுவனங்கள் ஜவுளி கடன் கட்டுவது குறித்து, கண்டுகொள்ளாமலும் இருக்கின்றன. எனவே, 'கோ-ஆப்டெக்ஸ்' நிறுவனத்திற்கு, 17 கோடி ரூபாய் வரை கடன் பாக்கியுள்ளது. இதனால், 'கோ-ஆப்டெக்ஸ்' நிறுவனத்திற்கு வட்டி நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு, இந்தாண்டு, 'கோ-ஆப்டெக்ஸ்' மூலம் ஜவுளி கடன் வழங்கப்படாது, என்றும் தகவல்கள் வெளியாயின. இது குறித்து, 'கோ-ஆப்டெக்ஸ்' மேலாண்மை இயக்குனர் உமா சங்கர் கூறியதாவது: 'கோ-ஆப்டெக்ஸ்' மூலம், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஜவுளி கடன் ஒரு மாதத்தில் கட்டப்பட்டு விடுகிறது. பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு பல தவணைகளில் ஜவுளி கடனை செலுத்தலாம் என, சலுகை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல நிறுவனங்களிலிருந்து, சம்பள பிடித்தம் செய்து, ஜவுளி கடன் திருப்ப செலுத்தாததால், 17 கோடி ரூபாய் வரை கடன் பாக்கியுள்ளது. இக்கடன் தொகையை, படிப்படியாக வசூலித்து விடலாம் என்றாலும், 4 கோடி ரூபாய் வரை, வராக் கடனாகும் நிலையுள்ளது.எனவே, இவ்வாண்டு பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு, நேரடியாக, 'கோ-ஆப்டெக்ஸ்' மூலம் கடன் வழங்குவதை தவிர்த்து, அவர்களுக்கு வங்கிகள் மூலம், கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இந்த ஏற்பாட்டில் வங்கியினருக்கு, 'கோ-ஆப்டெக்ஸ்' ஜவுளி நிலையங்களில், தனி கவுன்டர் வசதி செய்தி கொடுக்கப்படும். இக்கவுன்டரில் பணியாளர்கள், ஜவுளி கடன் அனுமதி பெற்று, தேவையான ஜவுளிகளை வாங்கிக் கொள்ளலாம். இவ்வசதியில் பொதுமக்களும் உரிய ஆவணங்களுடன் வங்கியினரை அணுகி, கடன் பெற்று, ஜவுளி வாங்க வசதி செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு உமா சங்கர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|