பதிவு செய்த நாள்
16 செப்2011
03:27
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) நிறுவனத்தின் ஓர் அங்கமான, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சி.பி.சி.எல்.,) நிறுவனம், சென்னை அருகே 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற் சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. இத்துடன், பல்வேறு விரிவாக்கப் பணிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு திட்டங்களுக்கு, 16ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும் தீர்மானித்துள்ளது. இது குறித்து சி.பி.சி.எல்., மற்றும் ஐ.ஓ.சி., குழுமத் தலைவர் புடோலா கூறியதாவது: பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே அதிக இடைவெளி உள்ளது. வரும் 2016-17ம் நிதியாண்டில் சி.பி.சி.எல்., நிறுவனத்தின் பெட்ரோலியப் பொருட்களின் அளிப்பிற்கும், தேவைக்கும் இடையிலான பற்றாக்குறை, 27 லட்சம் டன்னாக இருக்கும். இது, 2021-22ம் நிதியாண்டில் 56 லட்சம் டன்னாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடைவெளியை குறைக்கும் பொருட்டு, விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக , சி.பி.சி.எல்., அதன் 30 லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலையை மூடி விட்டு, 90 லட்சம் டன் உற்பத்தித் திறன் கொண்ட சுத்திகரிப்பு ஆலையை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு ஆலையை மூடுவதற்கு பதிலாக, அதை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதையடுத்து, நிறுவனம், சென்னை அருகே அமுலவயல் கிராமத்தில், 60 லட்சம் டன் சுத்திகரிப்பு ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இது, சி.பி.சி.எல்., அமைந்துள்ள மணலியிலிருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ளது. இத்திட்டத்திற்கான அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சி.பி.சி.எல்., நிறுவனத்தின் மூலதனச் செலவு 2,500 கோடி ரூபாய் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்துடன், கச்சாஎண்ணெய் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் 3வது பிரிவை புனரமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இதையடுத்து, இப்பிரிவின் உற்பத்தித் திறன் 30 லட்சம் டன் என்ற அளவில் இருந்து, 40 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் மொத்த சுத்திகரிப்பு திறன் 1.15 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. நிறுவனம், பாரத் ஸ்டேஜ் - 4 தரத்திலான பெட்ரோலியப் பொருட்களை, சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கும், பாரத் ஸ்டேஜ்-3 தரத்தைக் கொண்ட பெட்ரோலியப் பொருட்களை, இதர நகரங்களுக்கும் வினியோகிக்கிறது. மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், வாகன எரிபொருள் தர மேம்பாட்டு திட்டத்தை 2,616 கோடி ரூபாய் செலவில் மேற்கொண்டு வருகிறது. நிறுவனம், பல்வேறு பிரிவுகளில் மேற்கொண்டு வரும், பாரத் ஸ்டேஜ்-4 தரத்திலான வாகன எரிபொருள் தர மேம்பாட்டு திட்டங்கள், இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 334 கோடி ரூபாய் திட்டச் செலவில் சி.டி.யு/என்.டீ.யு பிரிவின் உற்பத்தித் திறனை 37 லட்சம் டன்னில் இருந்து, 43 லட்சம் டன்னாக உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டம், வரும் 2012ம் ஆண்டு மே மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நிறுவனத்தின் மொத்த உற்பத்தித் திறன் 1.21 கோடி டன்னாக உயரும். இவ்வாறு புடோலா தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|