பதிவு செய்த நாள்
16 செப்2011
03:30
புதுடில்லி : நடப்பு 2011-12ம் ஆண்டு கரீப் பருவத்தில், நெல் உற்பத்தி, 8.70 கோடி டன்னாக உயரும் என்று வேளாண் அமைச்சகத்தின், முன்கூட்டிய மதிப்பீட்டின் முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2010-11ம் ஆண்டு கரீப் பருவத்தில் 8.06 கோடி டன்னாக இருந்தது. டில்லியில் தொடங்கியுள்ள ரபி பயிர் மாநாட்டில் பங்கேற்ற மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், நடப்பு கரீப் பருவத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டார். அதில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உணவு தானியங்கள் உற்பத்தி, 36 லட்சத்து 80 ஆயிரம் டன் அதிகரித்து 12.38 கோடி டன்னாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டிற்கான நான்காவது முன்கூட்டிய மதிப்பீட்டில், மொத்த உணவு தானியங்கள் உற்பத்தி 12.02 கோடி டன்னாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, பருப்பு வகைகள் உற்பத்தி சிறப்பாக உள்ளது. எனினும், பருப்பு இறக்குமதி செலவு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையவில்லை. கடந்த கோடை காலத்துடன் ஒப்பிடும் போது, இவ்வாண்டு கோடை காலத்தில் பருப்பு வகைகள் உற்பத்தி 71 லட்சத்து 21ஆயிரம் டன் என்ற அளவில் இருந்து, 64 லட்சத்து 30ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. கரீப் பருவத்தில் ஜூன் -ஜூலை மாதங்களில் விதைப்பு பணிகள் நடைபெற்று, செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நெல் அறுவடை நடைபெறும். கடந்த ஆண்டு, கரீப் மற்றும் ரபி பருவங்களில் மொத்தம் 9 கோடியே 53 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பு 2011-12ம் ஆண்டு பயிர் பருவத்தில் (ஜூலை - ஜூன்), 10 கோடியே 20 லட்சம் டன் நெல் உற்பத்தி மேற்கொள்ள மத்திய வேளாண் அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த 8 சதவீத உயர்வு, கூடுதல் ஏற்றுமதிக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரீப் பருவத்தில் பருப்பு வகைகளின் உற்பத்தி 64 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதே காலத்தில், சோயாபீன் உற்பத்தி 1 கோடியே 25 லட்சம் டன்னாக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக உணவு தானியங்கள் உற்பத்தி 15-20 சதவீதம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, நடப்பு கோடை காலத்தில் 2 கோடியே 9 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டு கோடை காலத்தில் 2 கோடியே 8 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. வரும் 2011-12ம் ஆண்டு சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, சென்ற ஆண்டை விட சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சர்க்கரை பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 2 கோடியே 60 லட்சம் டன் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை, பொது உரிம அடிப்படையில் 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நடப்பு 2011-12ம் ஆண்டு கரீப் பருவத்தில், நாட்டின் கரும்பு உற்பத்தி 34 கோடியே 22 லட்சம் டன்னாக இருக்கும் என்று முதலாம் முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற 2010-11ம் ஆண்டு கரீப் பருவத்தில் 33 கோடியே 91 லட்சம் டன்னாக இருந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்கள், ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை30-70 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. டில்லியில் இன்று நடைபெறும் இறுதி நாள் மாநாட்டில், இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|