பதிவு செய்த நாள்
16 செப்2011
09:15
புதுடில்லி : நான்கு மாதங்களுக்குள், மீண்டும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்த்தப்பட்டுள்ளது. இது உடனடியாக ,நேற்று நள்ளிரவே அமலுக்கு வந்தது. சென்னை நகரில், நள்ளிரவு முதல், ஒரு லிட்டர் பெட்ரோல், 70 ரூபாய்,82 காசுகளாக இருந்தது. பெட்ரோல் விலை, கடந்த நான்கு மாதங்களுக்குள், எட்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு, பெருமளவு வீழ்ச்சியடைந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது. இதன் காரணமாக, சர்வதேச நாடுகளில் இருந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் போது, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. இதனால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன.பெட்ரோலியப் பொருட்களின் சர்வதேச விலைக்கும், இந்தியாவில் விற்கப்படும் விலைக்கும் பெரும் வித்தியாசம் இருந்து வந்தது. இதன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெரும் இழப்பை சந்தித்து வந்தன. பெட்ரோல் விலையை, சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ள, கடந்தாண்டு ஜூனில், மத்திய அரசு கட்டுப்பாட்டை தளர்த்தியது. இதன் பின், பெட்ரோல் விலை, பலமுறை உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக, மே மாதம் 15ம் தேதி, லிட்டருக்கு, ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், நடப்பாண்டில், 2,450 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மேலும் நஷ்டத்தை தாங்க முடியாது. உடனடியாக பெட்ரோல் விலையை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.இதன்படி, லிட்டருக்கு, ரூ.3.14 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. சென்னையில் எவ்வளவு: இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டில்லியில், ஒரு லிட்டர் ரூ.63.70ல் இருந்து, ரூ.66.84 ஆகவும், மும்பையில், ரூ.68.62 என்பது, ரூ.71.92 ஆகவும், சென்னையில், ரூ.67.50 லிருந்து, ரூ.70.82 ஆகவும், உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததால், நேற்று மாலை முதலே, பெட்ரோல், "பங்க்'களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|