பதிவு செய்த நாள்
18 செப்2011
01:38
புதுடில்லி : தற்போதைய நிலையில், உள்நாட்டில், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தேவையை விட குறைவாக உள்ளது. இவ்விரு பிரிவுகளிலும் தன்னிறைவு காணும் வகையில், தீவிர நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் வேளாண் உற்பத்தி குறித்த ஆய்வுக் கூட்டம், பிரதமர் அலுவலக முதன்மை செயலர் டி.கே.ஏ. நாயர் தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் துறை உள்பட முக்கிய ஆறு துறைகளின் செயலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இரண்டாவது பசுமை புரட்சி திட்டத்தின் கீழ், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களை ஒரு மாதத்திற்குள் அளிக்குமாறு வேளாண் அமைச்சக செயலரை, பிரதமர் அலுவலக முதன்மை செயலர் நாயர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அதிக மக‹ல் தரக்கூடிய பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை, இரண்டு ஆண்டுகளுக்குள் உருவாக்குமாறு இந்திய வேளாண்ஆராய்ச்சிக் கழகமும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பல அத்யாவசிய உணவு தானியங்களின் உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. நடப்பு வேளாண் பருவத்திலும், மேற்கண்ட உணவு தானியங்களின் உற்பத்தி, நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டில், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தேவையை விட குறைவாக உள்ளது. இதனால், அரசு,மேற்கண்ட உணவு தானியங்களை அதிகளவில், இறக்குமதி செய்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்தாண்டு, நம் நாட்டில் சாதனை அளவாக 1.81 கோடி டன் பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டன. எனினும் இது, நாட்டின் பருப்பு வகைகளுக்கான தேவையை விட 25 லட்சம் டன் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பருப்பு வகைகளை தொடர்ந்து இறக்குமதி செய்யும் ‹ழல் உள்ளது. எனினும், பருப்பு உற்பத்தி அதிகரித்து வருவதால், இறக்குமதி குறைந்து வருகிறது. சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் பருப்பு வகைகள் இறக்குமதி, 26 சதவீதம் சரிவடைந்து, 26 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2009-10ம் நிதியாண்டில், 35 லட்சம் டன்னாக இருந்தது. பருப்பு இறக்குமதியை மேலும் குறைக்கவும், உள்நாட்டில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கும் மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி, பருப்பு வகைகளை அதிகளவில் சாகுபடி செய்து வரும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இக்கிராமங்களில் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக மத்திய அரசு, 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதே போன்று, எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், இதே அளவிற்கான கிராமங்களில், மேம்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வரும் 2017ம் ஆண்டில், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு காண வேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது. தானிய உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், அவற்றை பாதுகாப்பதற்கான, சேமிப்பு கிடங்கு வசதிகள் போதிய அளவிற்கு இல்லை என்ற நிலையும் தற்போது உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசின் முகமை அமைப்பாக செயல்படும், இந்திய உணவுக் கழகம், 19 மாநிலங்களில், 1.50 கோடி டன் தானியங்களை சேமித்து வைக்கும் வகையில், கிடங்கு வசதிகளை உருவாக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள், 40 லட்சம் டன் உணவு தானியங்களை சேமித்து வைக்கும் வகையில், கிடங்கு வசதிகளை ஏற்படுத்துமாறு இந்திய உணவு கழகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு 11வது ஐந்தாண்டு (2007-12)திட்ட காலத்தில், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், கூடுதலாக 2 கோடி டன் உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|