பதிவு செய்த நாள்
19 செப்2011
03:31
புதுடில்லி : அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியப் பங்கு சந்தைகள் மற்றும் கடன் பத்திரங்களிலுமாக, நடப்பு செப்டம்பர் மாதத்தின், ஒன்பது வர்த்தக தினங்களில், 1,800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. இம்மாத இறுதிக்குள், இந்நிறுவனங்களின், இவ்வகையிலான முதலீடு, 5,000 - 6,000 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். செப்டம்பர் மாதம், 2ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலுமாக, இந்திய நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில், 28 ஆயிரத்து 757 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. அதேசமயம், இதே காலத்தில், 26 ஆயிரத்து 981 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களை விற்பனை செய்துள்ளன. ஆக, இந்நிறுவனங்களின் நிகர முதலீடு, 1,775.60 கோடி ரூபாயாக உள்ளது என பங்குச்சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி', வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவில் மேற்கொண்டிருந்த மொத்த முதலீட்டில், 7,902.50 கோடி ரூபாயை விலக்கிக் கொண்டன. இந்நிலையில், நடப்பு செப்டம்பர் மாதத்தில், இந்நிறுவனங்களின் நிகர முதலீடு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2008ம் ஆண்டில், சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், அவ்வாண்டு அக்டோபர் மாதத்தில், இந்நிறுவனங்கள், 13 ஆயிரத்து 489 கோடி ரூபாய் மதிப்பிற்கான, முதலீடுகளை விலக்கிக் கொண்டன. இதுகுறித்து, டெஸ்டிமோனி செக்யூரிட்டிஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதீப் பண்டோபாத்தியா கூறுகையில், "உலகளவில், பொருளாதார நிலை சுணக்கம் அடையும் போது, அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடுகளை விலக்கிக் கொள்கின்றன. இருப்பினும், இந்தியா போன்ற வளர்ச்சி அடையும் நாடுகளின் பங்குச் சந்தைகளை, இந்நிறுவனங்கள் பாதுகாப்பாக கருதுவதுடன், அதிகளவில் முதலீட்டையும் மேற்கொள்கின்றன' என்றார். நடப்பு செப்டம்பர் மாதத்தில், 2ம் தேதி முதல் 13ம் தேதி வரையில், இந்நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில், 2,041.30 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. அதேசமயம், 266 கோடி ரூபாயை விலக்கிக் கொண்டுள்ளன. நடப்பாண்டில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில், 21 ஆயிரத்து 306 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. அதேசமயம், கடந்த 2010ம் ஆண்டில், இந்நிறுவனங்களில், மொத்த முதலீடு, 1 லட்சத்து 79 ஆயிரத்து 674 கோடி ரூபாயாக இருந்தது. செப்டம்பர் மாதம் வரையிலுமாக, 1,736 அன்னிய நிதி நிறுவனங்கள், "செபி' அமைப்பிடம் பதிவு செய்து கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|