பதிவு செய்த நாள்
19 செப்2011
03:31
புதுடில்லி : தாவர எண்ணெய் இறக்குமதி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 23.2 சதவீதம் சரிவடைந்து, 8 லட்சத்து 17 ஆயிரத்து 440 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே மாதத்தில், 10 லட்சத்து 65 ஆயிரத்து 641 டன்னாக அதிகரித்து காணப்பட்டது. உள்நாட்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாகவே தாவர எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது. நடப்பு 2010-11ம் எண்ணெய் பருவத்தில் (நவம்பர் - அக்டோபர்), நவம்பர் முதல் ஆகஸ்ட் வரையிலான முதல் பத்து மாதங்களில், சுத்திகரிக்கப்பட்ட ஆர்.பீ.டீ. பாமாயில் இறக்குமதி 17 சதவீதம் சரிவடைந்து, 8 லட்சத்து 18 ஆயிரத்து 640 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த எண்ணெய் பருவத்தின் இதே காலத்தில், 9 லட்சத்து 87 ஆயிரத்து 959 டன்னாக அதிகரித்து காணப்பட்டது. இதே காலத்தில், சுத்திகரிக்கப்படாத பாமாயில் இறக்குமதி, 61 லட்சத்து 12 ஆயிரத்து 581 டன்னிலிருந்து, 57 லட்சத்து 96 ஆயிரத்து 151 டன்னாக சரிவடைந்துள்ளது. ஒட்டுமொத்த பாமாயில் இறக்குமதியில் ஆர்.பீ.டீ பாமாயிலின் பங்களிப்பு 12 சதவீதமாகவும், சுத்திகரிக்கப்படாத பாமாயிலின் பங்களிப்பு 88 சதவீதமாகவும் உள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதத்தில், சோப்பு உள்ளிட்டவை தயாரிக்க பயன்படும், சமையல் சாராத எண்ணெய் இறக்குமதி, 31 ஆயிரத்து 922 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 64 ஆயிரத்து 699 டன்னாக அதிகரித்து காணப்பட்டது. நடப்பு எண்ணெய் பருவத்தின் , முதல் 10 மாத காலத்தில், சமையல் சாராத எண்ணெய் வகைகளின் ஒட்டுமொத்த இறக்குமதி, 29 சதவீதம் சரிவடைந்து, 2 லட்சத்து 46 ஆயிரத்து 52 டன்னாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த பருவத்தின், இதே காலத்தில், 3 லட்சத்து 47 ஆயிரத்து 415 டன்னாக உயர்ந்திருந்தது. எனினும், நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி, இதற்கு முந்தைய ஜூலை மாத இறக்குமதியை விட 10.48 சதவீதம் குறைவாகும். 2010-11ம் ஆண்டு பயிர் பருவத்தில், எண்ணெய்வித்துக்கள் உற்பத்தி மிக அதிகளவாக 3.11 கோடி டன் என்ற அளவில் உள்ளது. நடப்பாண்டின் காரீப் பருவத்தில் மட்டும் இதன் உற்பத்தி, 2.09 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு, நம்நாடு, தாவர எண்ணெயை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்கிறது. குறிப்பாக, பாமாயில் எண்ணெயை, இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிலிருந்தும், சோயா எண்ணெயை அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்து கொள்கிறது. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு 7.5 சதவீத வரியும், சுத்திகரிக்கப்படாத சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு முழு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. நடப்பு செப்டம்பர் மாதம் 1ம் தேதி நிலவரப்படி, நாட்டின் பல்வேறு துறைமுகங்களில் உள்ள, சமையல் எண்ணெய் இருப்பு 5 லட்சத்து 70 ஆயிரம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், சுத்திகரிக்கப்படாத பாமாயிலின் பங்களிப்பு 3 லட்சத்து 30 ஆயிரம் டன்னாகவும், சுத்திகரிக்கப்பட்ட ஆர்.பீ.டீ.பாமாயிலின் பங்களிப்பு 90 ஆயிரம் டன்னாகவும் உள்ளது. மேலும், சோயா எண்ணெய் 80 ஆயிரம் டன்னாகவும், சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய் 70 ஆயிரம் டன்னாகவும் உள்ளது. இது தவிர, எண்ணெய் குழாய்களில் உள்ள தாவர எண்ணெய் இருப்பு, 8 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக உள்ளது. துறைமுகம் மற்றும் வினியோகிக்கும் குழாய்களில் உள்ள ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இருப்பு, 1 லட்சத்து 70 ஆயிரம் டன் குறைந்து, 13 லட்சத்து 90 ஆயிரம் டன்னாக மிகவும் சரிவடைந்துள்ளது. உள்நாட்டில் உற்பத்தி குறைவு மற்றும் இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு நிலையே இதற்கு முக்கிய காரணமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|