பதிவு செய்த நாள்
26 செப்2011
09:25
புதுடில்லி : கேபிள் "டிவி' ஒளிபரப்பு இன்னும் 6 மாதத்தில், டிஜிட்டல் மயமாகிறது. தற்போதுள்ள அனலாக் முறை கைவிடப்பட்டு, மிகவும் துல்லியமான ஒளிபரப்பைப் பெறும் வகையில், கேபிள் "டிவி' டிஜிட்டல் மயமாகிறது. இது முதற்கட்டமாக, சென்னை உட்பட நான்கு பெருநகரங்களில் அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் அமலுக்கு வருகிறது. இதற்காக, கேபிள் "டிவி' சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. கேபிள் "டிவி' ஒளிபரப்பை முற்றிலும் டிஜிட்டல் முறைக்கு மாற்ற வேண்டும் என, மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்திருந்தது. இதை உடனடியாக செயல்படுத்துவது கடினம் என்பதால், நான்கு கட்டமாக அமல்படுத்தவும் சிபாரிசு செய்திருந்தது. முதலில் சென்னை, கோல்கட்டா, டில்லி, மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில், இந்தாண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் அமல்படுத்தும்படி குறிப்பிட்டிருந்தது. டிராயின் இந்த பரிந்துரையை அமல்படுத்தும் வகையில், அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் டிஜிட்டலுக்கு மாறும்படி, நான்கு மெட்ரோ நகர, கேபிள் ஆபரேட்டர்களை, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கேட்டிருந்தது. இரண்டாவது கட்டமாக, பத்து லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான நகரங்களில் அமல்படுத்த 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கெடு விதித்திருந்தது. மூன்றாவது கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு 2014ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டிராயின் பரிந்துரையை அமல்படுத்துவதற்கு முன்பாக, இது சட்டமாக்கப்பட வேண்டும். இதற்காக, ஏற்கனவே உள்ள கேபிள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக, சட்ட அமைச்சகத்துடன் ஆலோசித்த பின் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டம் இயற்றப்படும். இதற்கு ஏற்றவகையில் தான், மெட்ரோ நகரங்களில் அமல்படுத்துவதற்கான தேதி, அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|