பதிவு செய்த நாள்
27 செப்2011
02:37
மும்பை:பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கடந்த ஒரு சில மாதங்களாக அதன் பயன்பாடு வெகுவாக குறைந்து வருவதாக தெரியவந்துள்ளது.இது குறித்து பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும், பெட்ரோலிய பிரிவிற்கான திட்டமிடுதல் மற்றும் ஆய்வு அமைப்பு, புள்ளி விவரம் ஒன்றை வெளி யிட்டுள்ளது. அதில், "கடந்த 2010ம் ஆண்டு, ஜூன் மாதம் பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது. இதன்படி, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, பெட் ரோல் விலை, 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல் பயன்பாடு ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, பெட்ரோல் பயன்பாடு 14 சதவீதம் என்ற அளவில், இரட்டை இலக்க வளர்ச்சி கண்டு வந்தது. ஆனால், இது, நடப்பாண்டு, ஏப்ரல் - ஆகஸ்ட் மாத காலத்தில், தற்காலிக புள்ளி விவரத்தின்படி 5 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. நடப்பு முழு நிதியாண்டில், பெட்ரோல் பயன்பாட்டு வளர்ச்சி 7 சதவீதம் என்ற அளவில் இருக்குமென மதிப்பிடப்பட்டிருந்தாலும், இதன் பயன்பாடு மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், பெட்ரோல் பயன்பாட்டு வளர்ச்சி, 4.5 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது.மேலும், கடந்த ஓராண்டிற்கு முன்பாக, கார்கள் விற்பனை வளர்ச்சி சிறப்பாக இருந்தது. இது, சென்ற ஜூலை மாதத்தில், 15.8 சதவீதமாக சரிவடைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் விற் பனை மேலும் வீழ்ச்சி கண்டது. இந்நிலையில் வங்கிக் கடனுக்கான வட்டி அதிகரிப்பால், வாகன கடன் வாங்குவதும் குறைந்து போயுள்ளது. கடந்த 2009-10ம் நிதியாண்டில், பெட்ரோல் பயன்பாட்டு வளர்ச்சி, 13.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது, 2010-11ம் நிதியாண்டில், 10.8 சதவீதமாக மேலும் சரிவடைந்தது. இது, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், ஒற்றை இலக்கத்திற்கு குறைந்து போயுள்ளது என, இந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|