பதிவு செய்த நாள்
01 அக்2011
00:38
சென்னை:மகிந்திரா நிறுவனம் "எக்ஸ்.யூ.வி 500' என்ற புதிய உயர்வகை பயன்பாட்டு காரை, சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. டபிள்யு-8 மற்றும் டபிள்யு-6 என்ற இரண்டு மாடல்களில், டீசலில் இயங்கும் இக்கார், ஒரு லிட்டருக்கு 15.1 கி.மீ., செல்லக்கூடியது.இப்புதிய காரை அறிமுகப்படுத்தி பேசிய, மகிந்திரா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை) அருண் மல்கோத்ரா கூறியதாவது:புதிய வகை "எக்ஸ்.யூ.வி 500' கார்கள், இந்தியா மட்டுமின்றி, சர்வதேச நாடுகளின் சாலைகளுக்கு ஏற்ற வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் இவை பரிசோதிக்கப்பட்டுள்ளன. மகிந்திரா நிறுவனத்தின் இப்புதிய கார், மும்பை, டில்லி, சென்னை, பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் விற்பனை செய்யப்படவுள்ளன. இதற்காக, இன்று முதல், இக்கார்களுக்கான முன்பதிவு மேற்கொள்ளப்படுகிறது.அதிக திறன் கொண்ட இந்த கார், மலைப்பிரதேசம், கரடுமுரடான சாலைகளிலும், சொகுசாக செல்லும் வகையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன், புதிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்காரில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 140 குதிரை திறன் கொண்ட இக்கார், 5.4 வினாடியில், 60 கி.மீ., வேகத்தை எட்டும். ஏழு வண்ணங்களில் இக்கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இப்புதிய கார்கள், நிறுவனத்தின் புனேயிலுள்ள சக்கான் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. முதல்கட்டமாக, மாதம் ஒன்றுக்கு 2,000 கார்கள் உற்பத்தி செய்யப்படும். பின்பு, தேவையைப் பொறுத்து, இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.சென்னையில் உள்ள நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த காரை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மட்டும், 650 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.சென்னையில், டபிள்யு-8 காரின் விலை, 12.13 லட்சம் ரூபாயாகவும், டபிள்யு-6 காரின் விலை, 10.96 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அருண் மல்கோத்ரா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|