பதிவு செய்த நாள்
01 அக்2011
00:47
சென்னை:அண்மையில் புதிய பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், பங்கு விலை வீழ்ச்சியால் பல கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளனர்.சென்ற ஆகஸ்ட் மாதம் புதிய வெளியீடுகளை மேற்கொண்ட ஐந்து நிறுவனங்களில், மூன்று நிறுவனப் பங்குகளின் விலை, 75 சதவீதம் வரை குறைந்து போயுள்ளது. எல் அண்டு டி பைனான்ஸ் நிறுவனம், 52 ரூபாய் என்ற விலையில் வெளியிட்ட பங்கின் விலை, தற்போது 6 சதவீதம் குறைந்து 49 ரூபாய் என்ற அளவில் விலை போய்க் கொண்டிருக்கிறது. அது போன்று, சென்ற மாதம் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட புருக்ஸ் லேப்ஸ் நிறுவனம், ஒரு பங்கின் விலையை 100 ரூபாய் என நிர்ணயித்திருந்தது. இப்பங்கு, தற்போது 75 சதவீதம் வீழ்ச்சி கண்டு 25 ரூபாய் என்ற அளவில் கைமாறி வருகிறது. எஸ்.ஆர்.எஸ் நிறுவனம், அதன் பங்கின் விலையை 58 ரூபாயாக நிர்ணயித்திருந்தது. இப்பங்கு தற்போது 41 சதவீதம் சரிவடைந்து 34 ரூபாயாக குறைந்துள்ளது.எனினும், ட்ரீ ஹவுஸ் எஜூகேஷன் அண்டு அக்சசரீஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்று, அதன் வெளியீட்டு விலையான 135 ரூபாயில் இருந்து 25 சதவீதம் உயர்ந்து, 169 ரூபாய் என்ற அளவில் கைமாறிக்கொண்டுள்ளது. அது போன்று, டி.டீ பவர் சிஸ்டம்ஸ் நிறுவனப் பங்கின் விலையும், வெளியீட்டு விலையான 256 ரூபாயில் இருந்து 260 ரூபாய் என்ற அளவில் சற்றே உயர்ந்துள்ளது. பங்குச் சந்தையில் பங்குகளின் விலை உயர்வதற்கும், வீழ்ச்சி காண்பதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. எனினும், மூலதனச் சந்தையில் பங்கு வெளியீட்டின் போது பங்குகள் வேண்டி விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டால், இழப்பை தவிர்க்கலாம் என்று இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர். பல்வேறு நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக மூலதனச் சந்தையில் களமிறங்கி புதிய பங்கு வெளியீடுகளை மேற்கொள்கின்றன. இவ்வெளியீடுகளை வர்த்தக வங்கிகள் நிர்வகிக்கின்றன. இவை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகத் திறன், சந்தை மதிப்பு, நிதி நிலை, எதிர்கால சாதக, பாதக அம்சங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பங்கு வெளியீட்டு விலையை நிர்ணயிக்க வேண்டும். ஆனால், பங்கு வெளியீட்டிற்கு பொறுப்பேற்கும் பெரும்பாலான வர்த்தக வங்கிகள் இதை கடைபிடிப்பதில்லை. பங்கு வெளியீட்டு நிறுவனங்களை திருப்திபடுத்தவும், வர்த்தக ஆதாயத்திற்காகவும் உண்மையான மதிப்பை விட கூடுதலாக பங்கின் விலையை நிர்ணயிக்கின்றன. இதனால், தகுதி குறைந்த நிறுவனங்கள் கூட, நல்ல வலுவான கட்டமைப்பு வசதி கொண்ட நிறுவனங்களுக்கு இணையாக, பங்கின் விலையை உயர்த்தி பங்கு வெளியீட்டை மேற்கொள்கின்றன. பங்கு வெளியீட்டிற்கான தரக் குறியீட்டை கிரிசில் போன்ற ஆய்வு நிறுவனங்கள் வழங்குகின்றன. பொதுவாக, இந்நிறுவனங்கள் வழங்கும் தரக் குறியீட்டின் அடிப்படையில், பங்கு வெளியீட்டில் முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் பங் வெளியீட்டில், தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்கள், உயர் வருவாய் பிரிவினர் உள்ளிட்டோருக்கு தனியாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்பிரிவுகளின் கீழ் பங்குகள் வேண்டி குவியும் விண்ணப்பங்களைப் பொறுத்து, பங்கு வெளியீட்டிற்கு உள்ள வரவேற்பை கணித்து விட முடியும். எனினும், பங்கு வெளியீட்டு நிறுவனங்களின் கவர்ச்சியான விளம்பரங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்பால் கவரப்படும் சில்லறை முதலீட்டாளர்கள், வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் பங்கு வெளியீடுகளில் பங்கேற்கின்றனர். இப்படிப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் போது, வெளியீட்டு விலையை விட குறையும் பட்சத்தில், சில்லறை முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். அதே சமயம், தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்கள், உயர் வருவாய் பிரிவினர் உள்ளிட்டோர் வர்த்தக அடிப்படையில் பங்குகளை வாங்குவதால், இழப்பை பொருட்படுத்தாமல், பங்குகளை விற்று விட்டு, ஆதாயம் தரும் வேறு நிறுவனப் பங்குகளின் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.ஆனால், பங்கு வெளியீட்டின் போது, முதலீடு என்ற அடிப்படையில் பணம் போடும் சில்லறை முதலீட்டாளர்கள், வலையில் சிக்கிய மீன் போல், சிக்கிக் கொள்கின்றனர். பங்குகளை விற்றால் பல மடங்கு இழப்பு, தொடர்ந்து வைத்திருந்தாலும், எப்போது பங்கு விலை ஏறும் என்று தெரியாத நிலையில் முதலீட்டாளர்கள் தவிக்கின்றனர்.இது போன்ற சூழலைத் தவிர்க்கும் நோக்கத்துடன், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி', பங்கு வெளியீடு மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றும் நிறுவனங்கள் மட்டுமே பங்கு வெளியீடு மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. எனினும், ஒரு நிறுவனம் நிர்ணயிக்கும் பங்கின் விலையில், "செபி' தலையிட முடியாத நிலை உள்ளது. இதனால் தான் சாதாரண நிறுவனம் கூட, விருப்பம் போல் பங்கின் விலையை நிர்ணயித்துக் கொண்டு பங்கு வெளியீட்டை மேற்கொள்ள முடிகிறது.இதை தடுக்க கடுமையான விதிமுறையை அமல்படுத்த பங்கு முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சரிவின் சரித்திரம்..:நடப்பு காலண்டர் ஆண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, 37 பங்கு வெளியீடுகள் வாயிலாக, 5,947 கோடி ரூபாயை நிறுவனங்கள் திரட்டியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 35 பங்கு வெளியீடுகள் மூலம், 12 ஆயிரத்து 606 கோடி ரூபாய் திரட்டப்பட்டது.கடந்த எட்டு மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 26 நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில், 16 நிறுவனப் பங்குகள், அவற்றின் வெளியீட்டு விலையை விட குறைந்துள்ளன. ஏழு நிறுவனப் பங்குகளின் விலை 50 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சி கண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|