பதிவு செய்த நாள்
02 அக்2011
09:20
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இன்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்பதால், நேற்றே அட்வான்ஸ் புக்கிங்கில் சரக்குகளை வாங்கி, இருப்பு வைக்கத் தொடங்கி விட்டனர். வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில், தமிழகம் முழுக்க உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ள நிலையில், வேட்பாளர்களாக களத்தில் உள்ளவர்கள் வாக்காளர்களைக் கவர, பல்வேறு நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று (அக்., 2ம் தேதி) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுபானக் கடைகள் மூடியிருக்க வேண்டும் என்று, அரசு உத்தரவிட்டது.ஆனால், தேர்தல் நேரம் என்பதால், வேட்பாளர்கள் சின்னம் முடிவாகும் முன்னரே ஓட்டு வேட்டையில் இறங்கி விட்டனர். அவர்களது ஆதரவாளர்களையும், "திருப்தி'படுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக, குடிமகன்களை உற்சாகப்படுத்தினால் தான், தேர்தலில் தேவையான ஓட்டுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உறுதியாகி உள்ளது.அதனால், வார விடுமுறை நாளான இன்று (ஞாயிறு) டாஸ்மாக் கடைகள் விடுமுறை என்றாலும், சரக்கு இல்லை என்ற சங்கடம் தங்களது ஆதரவு குடிமகன்களுக்கு இருக்கக் கூடாது என்ற உறுதியுடன், நேற்றே அவற்றை வாங்கி பாதுகாப்பாக (பதுக்கி) இருப்பு வைக்கத் தொடங்கி விட்டனர். இதனால் தங்களை, "குஷி'ப்படுத்த வேண்டியது வேட்பாளர்களின்,"கடமை' என்று, குடிமகன்களும் உற்சாகத்தில் உள்ளனர்.இது தவிர, தேர்தலை முன்னிட்டு சரக்கு விற்பனையில், "காசு' பார்க்கும் திட்டத்தில், கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்கவும் வழக்கம் போல் திட்டமிடப்பட்டுள்ளது. போலீசார் என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், குடிமகன்கள் காட்டில் இன்று,"சரக்கு மழை' பலமாக பெய்யும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|