பதிவு செய்த நாள்
05 அக்2011
02:37
இந்திய பங்குச் சந்தையின் வீழ்ச்சி காரண மாக, பல சிறந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்துள்ளது. எனவே, பல முதலீட்டாளர்கள் பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் (எஸ்.ஐ.பி.), மேற்கொள்ளப்படும் முதலீடு, சராசரியாக 40 சதவீதம் அதிகரித்து 1,300 கோடி முதல் 1,400 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி', பரஸ்பர நிதித் துறையில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. இதனால், பரஸ்பர நிதித் துறை சார்ந்த நிறுவனங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டன. பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த முதலீடும் சரிவடைந்தது.இதையடுத்து, பரஸ்பர நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்களை ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. நாடு முழுவதும் தொடர்ந்து, முதலீட்டாளர் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு நல்ல அளவில் பலன் கிடைத்துள்ளது. பரஸ்பர நிதித் திட்டங்களில், மாதந்தோறும் மேற்கொள்ளப்படும் முதலீடு, 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.இது குறித்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி'யின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"பொதுவாக, சில்லறை முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதித் திட்டங்களில் ஒரு மாதத்திற்கு சராசரியாக, 800 கோடி முதல் 900 கோடி ரூபாய் வரை முதலீடு மேற்கொள்வது வழக்கம். ஆனால், இது தற்போது 1,200 கோடி முதல் 1,300 கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது' என தெரிவித்தார். கடந்த 2008ம் ஆண்டு பங்குச் சந்தை வீழ்ச்சி கண்ட போது ஏற்பட்ட அனுபவத்தில், சில்லறை முதலீட்டாளர்கள் தற்போதைய பங்குச் சந்தை சரிவை சாதகமாகக் கொண்டு முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். அவர்கள், மிகுந்த முன்னெச்சரிக்கையுடன், இந்த சரிவை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு, பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதுவும், மொத்தமாக முதலீடு மேற்கொள்ளாமல், மாதாந்திர முதலீட்டுத் திட்டம் வாயிலாக சிறுகச் சிறுக பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இது குறித்து, பரஸ்பர நிதித் திட்டங்களை நிர்வகித்து வரும் நிர்வாகிகள் கூறும்போது, "புதிய பரஸ்பர நிதித் திட் டங்களுக்கு, முதலீட்டாளர் களிடையே வரவேற்பு குறைந்துள்ளது. அதே சமயம், அவர்கள் பெருந்தொகையை மொத்த மாக முதலீடு செய்வதையும் தவிர்த்து வருகின்றனர்' என்று தெரிவித்தனர்.நடப்பு காலண்டர் ஆண்டில், உள்நாட்டு பங்குச் சந்தை குறியீடுகள் சராசரியாக, 18 சதவீத சரிவைச் சந்தித்துள்ளன. இந்த சரிவு காலத்தில், பரஸ்பர நிதித்திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது. உதாரணமாக, சென்ற பிப்ரவரி மாதம், பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி அடைந்த போது, பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் 2,843 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, நடப்பு காலண்டர் ஆண்டில், ஒரு மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிகபட்ச முதலீடாகும். இதற்கடுத்து, ஆகஸ்ட் மாதத்தில்,பங்குச் சந்தை மேலும் சரிவை சந்தித்த போது 1,986 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. "மாதாந்திர முதலீட்டு திட்டம் வாயிலான முதலீடு மட்டுமின்றி, ஒட்டு மொத்த முதலீட்டுத் தொகையும் அதிகரித்துள்ளது' என, யூ.டி.ஐ. அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி (சந்தைப்படுத்துதல்) ஜெய்தீப் பட்டாச்சார்யா தெரிவித்தார்.பரஸ்பர நிதி திட்டங்களில், மாதாந்திர முதலீடு அதிகரித்து வருவது, இத்துறையின் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏனெனில், இத்தகைய முதலீடுகள், இதர முதலீடுகளைப் போல் திரும்பப் பெறப்படாமல், திட்ட காலம் வரை தொடர்கின்றன. பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டில், 95 சதவீத பங்களிப்பை சில்லறை முதலீட் டாளர்கள் வழங்கி வருகின்றனர் என, இத்துறையினர் தெரிவித்தனர்.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் 1,703 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப் பட்டுள்ளது. அதே சமயம், சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் இத்திட்டங்களில் இருந்து 7,600 கோடி ரூபாய் திரும்ப எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற 2010-11ம் நிதியாண்டில்,பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் இருந்து, மிக அதிக அளவாக 13 ஆயிரத்து 405 கோடி ரூபாய் திரும்ப எடுக்கப்பட்டுள்ளது." நடப்பு நிதியாண்டின் ஆகஸ்ட் மாதத்தில், பங்கு சார்ந்த பரஸ்பர நிதித் திட்டங்களில் 1,986 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டு ள்ளது.இது, இத்துறையை ஊக்குவிப்பதாக உள்ளது' என, ஜே.பி. மார்கன் மியூச்”வல் பண்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டபர் ஸ்பெல்மன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|