பதிவு செய்த நாள்
08 அக்2011
01:55
சேலம்:கோவை, திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்களின் ஸ்டிரைக், நூலிழை விலை உயர்வு, மாநில அரசின் வரி விதிப்பு, மின்தடை ஆகியவற்றால் தீபாவளி ஜவுளி ரகங்களின் விலை, 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.தமிழகத்தில், கோவை, திருப்பூர், பல்லடம், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் ஜவுளி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதுடன் வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜவுளி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக உள்ள நூலிழை விலை, சில ஆண்டுகளாக வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து வருகிறது. நூலிழை விலை, 50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதால், இத்தொழிலில் உள்ளோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில், 4.6 கிலோ எடை கொண்ட, 2க்கு 80 ஒரு பன்டல் நூலிழை, 1, 050 ரூபாய்க்கு விற்றது. இது, தற்போது 1,550 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல், 2க்கு, 100 நூலிழை, 1,500 ரூபாயில் இருந்து 2,100 ரூபாயாக அதிகரித்துள்ளது. 800 ரூபாய்க்கு விற்ற2க்கு60 நூல்,1,200 ரூபாய்க்கும்,700 ரூபாய்க்கு விற்ற 2க்கு, 40 நூல்,1,100 ரூபாய்க்கும் விற்ப னையாகிறது. சென்ற ஆண்டு 700 ரூபாய்க்கு விற்ற 40ம் நம்பர் நூல் விலை, தற்போது 1,000 ரூபாயாக உயர்ந் துள்ளது.நூல் விலை மட்டுமின்றி, தொழிலாளர்களுக்கான கூலியில், 25 சதவீதம் உயர்வு, சாயங்களின் விலையில், 20 சதவீதம் அதிகரிப்பு ஆகியவற்றாலும் துணிகளின் விலை உயர்ந்துள்ளது. இது தவிர, தமிழகத்தில் தொடரும் மின் தடையால் ஜவுளித் தொழில் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. உற்பத்தியாளர்கள், மூலப் பொருட்களின் விலை உயர்வை, ஜவுளி ரகங்களின் விலையில் சேர்த்து விட்டதால், ஜவுளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 50 ரூபாய்க்கு விற்ற ஒரு மீட்டர் சாதாரண துணி, 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. வேட்டி, துண்டு ரகங்களின் விலையும் 25 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் சாதாரண வேஷ்டி, 150 ரூபாய்க்கு விற்றது. இது தற்போது, 180 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 35 ரூபாய்க்கு விற்ற துண்டின் விலை, 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளி விலை உயர்வால் பட்டு வேட்டி, பட்டு துண்டுகளின் விலையில், 500 முதல், 750 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பேன்ட் தைப்பதற்கான நடுத்தர துணி ரகம், ஒரு மீட்டர் 80 ரூபாயிலிருந்து, 120 ரூபாயாகவும், சட்டை துணி, 60 ரூபாயில் இருந்து 90 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.ஜட்டி, பனியன்களின் விலையில் ரகம் வாரியாக, 10 ரூபாய் முதல், 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அனைத்து ரக சேலைகளின் விலை, 50 ரூபாய் முதல், 80 ரூபாய் வரையும், பட்டு சேலைகள் விலை, 500 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளன. மிடி, சுடிதார் உள்ளிட்ட ரெடிமேட் ரகங்களின் விலையும், 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சிறுவர், சிறுமியருக்கான அனைத்து ஆடைகளின் விலை, 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நூலிழை விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் தீபாவளி நாட்களில் துணி ரகங்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் வேணுகோபால் கூறியதாவது: தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை விட நூலிழை விலை உயர்வு, ஜவுளி தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி தொழிலாளர்களின் சம்பள உயர்வு, மூலப் பொருட்களின் விலை உயர்வால், கடந்த ஆண்டு டன் ஒப்பிடுகையில் தற்போது ஜவுளி ரகங்களின் விலையில், 20 முதல், 30 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்வதால், ஜவுளி ரகங்களின் விலை மேலும் உயரும் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|