பதிவு செய்த நாள்
09 அக்2011
01:19
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, செப்., 30ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 123 கோடி டாலர் (5,904 கோடி ரூபாய்) சரிவடைந்து, 31 ஆயிரத்து, 148 கோடி டாலராக (14 லட்சத்து 95 ஆயிரத்து 104 கோடி ரூபாய்) குறைந்துள்ளது. கடந்த செப்., 23ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அன்னியச் செலாவணி கையிருப்பு, 406 கோடி டாலர் குறைந்து, 31 ஆயிரத்து, 271 கோடி டாலராக சரிவடைந்திருந்தது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, நாட்டின் அன்னியச் செலாவணி தொடர்ந்து இரண்டு வாரங்களாக சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நிதியத்தில், நம்நாடு வைத்துள்ள செலாவணியின் மதிப்பு, 35 கோடி டாலர் குறைந்து, 261 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. மேலும், எஸ்.டீ.ஆர் மதிப்பும், 70 லட்சம் டாலர் சரிவடைந்து, 450 கோடி டாலராக குறைந்துள்ளது.அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு, 35 கோடி டாலர் அதிகரித்து, 2,867 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, ஸ்டெர்லிங், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளி மதிப்பு மாறுபட்டதைத் தொடர்ந்து, கையிருப்பில் உள்ள அன்னியச் செலாவணியின் மதிப்பு சரிவடைந்துள் ளதாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக, ஐரோப்பிய மத்திய வங்கி முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து, இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் சூடுபிடித்துள்ளது. இதனால், அன்னிய முதலீட்டாளர்கள் பெருமளவில் இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். எனவே, வரும் வாரத்தில், ரூபாயின் மதிப்பு உயரும் என்பதுடன், செலாவணி வரத்தும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|