பதிவு செய்த நாள்
29 அக்2011
00:21
உருக்கு விலை உயர்ந்து வருவதால், மோட்டார் வாகனங்கள் மற்றும் ரெப்ரிஜெரேட்டர், வாஷிங் மிஷின், 'ஏசி' போன்ற நுகர்வோர் சாதனங்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மூலப்பொருள்களின் விலை உயர்வு,டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு உள்ளிட்ட காரணங்களால், உருக்கு நிறுவனங்களின் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால், இந்நிறுவனங்கள், நுகர்வோர் சாதனங்கள் தயா ரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கும் உருக்கு பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ்: இந்தியாவில் மிக அதிக அளவில் நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், தீபாவளி பண்டிகை முடிந்ததை அடுத்து, விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. ரெப்ரிஜெரேட்டர்,வாஷிங் மிஷின் ஆகியவற்றின் விலை உயரும் என்று தெரிகிறது. எந்த அளவிற்கு விலை உயர்வு இருக்கும் என்பதை தெரிவிக்க மறுத்த, இந்நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஒய்.வி.வர்மா, 'விலை உயர்வு குறித்து, இன்னும் முடிவெடுக்கவில்லை' என்றார். இந்தியாவில் நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில், சாம்சங் நிறுவனம் இரண்டாவது இடத்திலும், வீடியோகான் நிறுவனம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 'விலை உயர்வு குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்பட வில்லை' என்று தெரிவித்தார். இதே கருத்தை, வீடியோகான் குழும தலைவர் பிரதீப் தூத்தும் தெரிவித்தார்.ரூபாய் மதிப்பு: எனினும் எல்.ஜி., நிறுவனம் விலையை உயர்த்தினால், மற்ற நிறுவனங்களும் விலையை உயர்த்தும் என இத்துறையினர் தெரிவித்தனர். எனினும், எல்.ஜி., சாம்சங் மற்றும் வீடியோகான் நிறுவனங்கள், சென்ற மாதம் நுகர்வோர் சாதனங்கள் விலையை 1-5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. சென்ற செப்டம்பர் மாதம் டாலருக்கு எதிராக ரூபாயின் வெளிமதிப்பு 9 சதவீத அளவிற்கு வீழ்ச்சி கண்டதால், மேற்கண்ட அளவிற்கு விலை உயர்த்தப்பட்டது. தற்போது தீபாவளி முடிந்த பிறகு, மீண்டும் விலை உயர்த் தப்பட்டால், அது நுகர்வோரை பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நுகர்வோர் சாதனங்களை தயாரிப்பதற்கு, உருக்கு பொருட்கள் அத்தியாவசிய மூலப்பொருளாக உள்ளது. அதனால், இத்துறையில் உள்ள நிறுவனங்கள், உருக்கு நிறுவனங்களுடன், உருக்கு சப்ளை தொடர்பாக நீண்ட கால அடிப்படையில் விலையை நிர்ணயித்து ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. இந்த ஒப்பந்த விலையை உயர்த்த ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் போன்ற உருக்குத் தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்: இந்தியாவில் உருக்கு உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 512 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டதால், இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் இயக்குனர் ஜெயந்த் ஆச்சார்யா கூறுகையில்,'மாதாந்திர அடிப்படையிலான ஒப்பந்தப்படி, நடப்பு அக்டோபர் மாதம் 3-4 சதவீத அளவிற்கு விலை அதிகரித்துள்ளது. காலாண்டு அடிப்படையிலான விலை உயர்வு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். எந்த அளவிற்கு விலையை அதிகரிப்பது என்பது குறித்து தற்போது தெரிவிக்க இயலாது' என்றார். இந்நிறுவனத்தை தொடர்ந்து இதர உருக்கு நிறுவனங்களும்,உருக்கு விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. பொதுவாக, உருக்கு நிறுவனங்கள் மூன்று முதல் ஆறுமாதங்கள் வரை நீண்ட கால அடிப்படையில் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. பெரும்பாலான ஒப்பந்தங்கள் இம்மாதமும், வரும் நவம்பர் மாதமும் புதுப்பிக்கப்பட உள்ளன. அப்போது புதிய விலை அடிப்படையில் ஒப் பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாட்டா மோட்டார்ஸ்: பெரும்பாலும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தான், உருக்கு பொருட்கள் தயாரிப்பு நிறு வனங்களுடன் நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத் தின் தலைவர் ரவி பிஷரோடி கூறும்போது,' கடந்த சில மாதங்களாக உருக்கு விலை உயர்ந்துள்ளது. அதனால், இம்மாதம் வாகனங்கள் விலையை ஒரு சதவீதம் உயர்த்தியுள்ளோம்.மீண்டும் விலை உயருமா, இல்லையா என்பதை இப்போது கூற முடியாது' என்றார். ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூத்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,' செவர்லெட் க்ரூஸ் கார் விலையில் 5ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சந்தை நிலவரத்தை பொறுத்து, வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் விலையை மீண்டும் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும். அப்படியே விலையை உயர்த்தினாலும், அது ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும்' என்று தெரிவித்தார். சர்வதேச அளவில், உயர் ரக நிலக்கரியின் விலை குறைந்துள்ளது. இது, இவ்வகை நிலக்கரியை இறக்குமதி செய்யும் உருக்கு நிறுவனங்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது. எனினும், இதனால் எந்த வித பயனையும் அடைய முடியாதபடி, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது தான் சோகம் என்கின்றனர் இத்துறையை சார்ந்தவர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|