பதிவு செய்த நாள்
30 அக்2011
09:28
வங்கி ஏ.டி.எம்., மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பது போல், கைரேகை பதிவு செய்த பின், தானியங்கி இயந்திரங்கள் மூலம் பக்தர்கள் லட்டு பிரசாதம் பெற்றுக் கொள்ளும் புதிய திட்டத்தை செயல்படுத்த, திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. "இதற்கான இயந்திரங்கள், விரைவில் பெங்களூரிலிருந்து திருமலைக்கு கொண்டு வரப்படும்' என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பதி, திருமலையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஆர்ஜித சேவா டிக்கெட் ஒன்றுக்கு இரண்டு லட்டுகள், வி.ஐ.பி., தரிசனம், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், 50 ரூபாய் சிறப்பு தரிசனம், பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கும், ஒரே மாதிரியாக இந்த டிக்கெட்களின் மீது, இரண்டு லட்டுகள் வழங்கப்படுகின்றன. இலவச தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கு, மானிய விலையில், 20 ரூபாய்க்கு, இரண்டு லட்டுகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் லட்டு:கூடுதலாக லட்டு தேவைப்பட்டால், ஒரு பக்தருக்கு, 4 லட்டுகள் வீதம் ஒரு லட்டு, 25 ரூபாய் விலையில், லட்டு விற்பனை கவுன்டர்கள் மூலம் விற்கப்படுகின்றன. ஒரு லட்டின் எடை 175 கிராம் இருக்க வேண்டும். பக்தர்கள் லட்டு எடையை சரிபார்த்துக் கொள்ள, கவுன்டர்கள் அருகே எடை இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. லட்டு கவுன்டரில் பணியாற்றுவோர் லட்டுகளை, "கிள்ளி' எடுத்து விடுவதால், லட்டின் தரமும், எடையும் குறைகிறது. இலவச தரிசன பக்தர்களுக்கு வழங்கப்படும், லட்டு டோக்கன்களிலும் தேவஸ்தான ஊழியர்களின் உதவியுடன் முறைகேடுகள் நடப்பதாகவும், அடிக்கடி புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இயந்திரம் மூலம் லட்டு:லட்டு வினியோக முறைகேடுகளைத் தடுக்க, நவீன தொழில் நுட்பத்தை உபயோகித்து, இயந்திரம் மூலம் லட்டு வழங்க, தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, காகிதத்தில் வழங்கப்படும்,"டோக்கன்' முறையை நிறுத்தி விட்டு, வலது கை ஆள்காட்டி விரல் ரேகையை பதிவு செய்து, பக்தர்களின் உருவப் படத்துடன் பதிவு செய்ய இயந்திரம் நிறுவப்படும். கைரேகை பதிவு செய்யப்படும் இந்த இடத்தில், பக்தர்கள் லட்டுக்கான தொகையை செலுத்த வேண்டும். பின்னர், லட்டு பெறுவதற்கான அமைக்கப்பட உள்ள தானியங்கி இயந்திர மையத்திற்கு சென்று, கைவிரலை பதிவு செய்தால், பக்தர்களுக்கு பதிவு செய்யப்பட்ட லட்டுகள் வெளியே வரும். இந்த புதிய நடைமுறையை செயல்படுத்துவதன் மூலம், முறைகேடுகளை தவிர்க்கவும், லட்டு கவுன்டர்களில் ஊழியர்களால் ஏற்படும் நிதிச் சுமையைக் குறைக்கவும் முடியும் என, தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.சோதனை முறையில் செயல்படுத்த உள்ள இந்த நவீன தொழில் நுட்ப வசதி வெற்றிகரமாக செயல்பட்டால், சாமி தரிசனத்திற்கு டிக்கெட் வழங்கும் முறையையும் ரத்து செய்து விட்டு, கைரேகை பதிவு முறையை விரிவுபடுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|