பதிவு செய்த நாள்
30 அக்2011
10:35
வீடுகளுக்கான சமையல் எரிவாயு விற்பனையால், பொதுத் துறை நிறுவனங்களுக்கு கடந்த ஆறு மாதங்களில், 13 ஆயிரத்து 820 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அந்நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளன.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை, பொதுமக்களுக்கு வினியோகம் செய்கின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர்கள், வீட்டு உபயோகத்திற்கு, 14.2 கிலோ, வர்த்தக உபயோகத்திற்கு, 19 கிலோ, தொழிற்சாலை உபயோகத்திற்கு, 47.5 கிலோ என, மூன்று ரகங்களில் விற்கப்படுகின்றன. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை, தற்போது, 405 ரூபாய்க்கு சென்னையில் வழங்கப்படுகிறது. ஒரு சிலிண்டருக்கு ரூ.270 நஷ்டம் அரபு நாடுகளில் ஒரு டன் எரிவாயு, 803.81 டாலர் (38 ஆயிரத்து 582 ரூபாய்) விற்கிறது. இறக்குமதி செலவு, இழப்பு, துறைமுகக் கட்டணம், கலால் வரி, சுத்திகரிப்பு செலவு, சிலிண்டரில் நிரப்பும் கட்டணம், ஆயில் நிறுவனங்களின் லாபம் ஆகியவை சேர்த்து, டில்லி நகரை வைத்து கணக்கிட்டால், வீட்டு சிலிண்டர் ஒன்றின் அசல் விலை, 666.31 ரூபாய் வருகிறது.டீலருக்கு வழங்கும் விலை 373.43 ரூபாய், மத்திய அரசு வழங்கும் மானியம் 22.58 ரூபாய் போக, ஆயில் நிறுவனங்களுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு, 270.29 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு இதன்படி, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, ஆறு மாதங்களில் ஆயில் நிறுவனங்களுக்கு, வீட்டு உபயோக சமையல் எரிவாயு வகையில் மட்டும், 13 ஆயிரத்து 820 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அந்நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளன.இதுபோல், டீசல் விற்பனை மூலம், 37 ஆயிரத்து 719 கோடியும், கெரசின் மூலம், 13 ஆயிரத்து 361 கோடி ரூபாய் என, மொத்தம், 64 ஆயிரத்து 900 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, அறிக்கை சமர்ப்பித்துள்ளன.வீடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும், டீசல் விலையையும் உயர்த்த, மத்திய அரசை நிர்பந்திப்பதற்கான உத்தியாகவே இந்த அறிக்கை அமைந்துள்ளதாக, பொதுமக்கள் கருதுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|