பதிவு செய்த நாள்
31 அக்2011
12:23
சென்னை : ""தமிழகத்தில் ஒட்டுமொத்த அளவில், ஒரு நொடிக்கு 7 மொபைல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன'' என, அரசு தொழில் துறை இணை செயலர் சண்முகம் பேசினார். "பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேம்படுத்த, வருங்காலத்தில் உள்ள சவால்களும், நிலைப்பாடுகளும்' என்ற தலைப்பில், ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கம் சென்னை, விவேகானந்தா கல்லூரியில் நடந்தது. இதில், அரசு தொழில் துறை இணை செயலர் சண்முகம் பேசியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும், பொறியியல் உள்ளிட்ட துறையில் லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டங்களைப் பெறுகின்றனர். ஆனால், குறைந்த அளவு ஊதியத்திலேயே பணியில் சேருகின்றனர். தமிழகம், மோட்டார் உட்பட எல்லா துறைகளிலும் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது. தமிழகத்தில் பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் தொழில் துவங்குகின்றன. தமிழகத்தில் ஒட்டுமொத்த அளவில், ஒரு நொடிக்கு 7 மொபைல்போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 1 நிமிடத்திற்கு, மூன்று கார்கள் உற்பத்தியாகின்றன. 75 வினாடிக்கு ஒரு வர்த்தக வாகனம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் தனிநபர் வருமானத்தில், தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. இவ்வாறு சண்முகம் பேசினார். அரசு பொதுத் துறை முதன்மைச் செயலர் சாய்குமார் பேசும் போது, ""1991ம் ஆண்டு முந்தைய அரசின் கொள்கைகள், பொதுத் துறை நிறுவனத்திற்கு மட்டும் தான் சாதகமாக இருந்தன. 1991ம் ஆண்டுக்குப் பிறகு அறிமுகப்படுத்திய புதிய பொருளாதார கொள்கையால், நாட்டின் பொது மற்றும் தனியார் துறைகள் அசுர வளர்ச்சியடைந்துள்ளன. தற்போது நலிவடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் மூலம், அதிகளவு வேலைவாய்ப்பைப் பெற முடியும்'' என்றார். நிகழ்ச்சியில், தாய் பல்கலைக் கழக வர்த்தக கூட்டமைப்பு செயல் இயக்குனர் ஜக்ரின் ஸ்ரீமுன், அரசு முதன்மைச் செயலர் ஸ்ரீதர், விவேகானந்தா கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|