பதிவு செய்த நாள்
01 நவ2011
00:08
சென்னை: சென்னையில் வரும் 4 ம் தேதி, இந்திய வங்கிகளின் "பேங்க்கான்' மாநாடு தொடங்க உள்ளது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், இந்திய வங்கிகள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு, நந்தம்பாக்கம் வர்த்தக மையம் மற்றும் லீ மெரிடியன் ஓட்டலில் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து, ஐ.ஓ.பி., தலைவரும், நிர்வாக இயக்குனருமான எம்.நரேந்திரா கூறியதாவது: இந்தியாவில் 1970 களின் மத்தியில், வங்கிப் பொருளாதார வல்லுனர்கள் பங்கேற்புடன் தொடங்கிய "பேங்க்கான்' மாநாடு, வங்கித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களையும், மேம்பாட்டையும் கொண்டு வந்துள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் இம்மாநாடு, ஐ.ஓ.பி.,யின் தீவிர முயற்சியால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் சென்னையில் நடைபெற உள்ளது. வங்கியாளர்கள், நிதிக் கொள்கைகளை வகுப்போர், வங்கிக் கட்டுப்பாட்டு அமைப்பினர் ஆகியோர், வங்கித் துறையை மேம்படுத்துவதற்கான, ஆக்கபூர்வ சிந்தனைகளையும், சீர்மிகு கருத்துக்களையும் எடுத்துரைக்கும் களமாக, இம்மாநாடு விளங்கும்.வரும் ஆண்டுகளில், வங்கிகள் எதிர்கொள்ள உள்ள சவால்களையும், அதற்கான தீர்வுகளையும் வழங்குவதோடு, வங்கித் துறையின் வருவாயை பெருக்கி, வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்கான சிறந்த ஆலோசனை மன்றமாகவும் இம்மாநாடு திகழும். இவ்வாறு நரேந்திரா தெரிவித்தார்.பேங்கிபீடியாஇந்தியா ரிசர்ச் பவுண்டேஷன் இயக்குனரும், பொருளாதார வல்லுனருமான வி.கோபாலன் கூறும்போது, "முந்தைய மாநாடுகள், வங்கிப் பிரச்னைகளை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளையும், உரிய செயல்பாடுகளையும் வகுப்பதற்கு பயனுள்ளவையாக இருந்தன. இவ்வாண்டு, "இந்திய வங்கித் துறை அடுத்த பத்தாண்டுகளில் சந்திக்க உள்ள போட்டி' என்ற தலைப்பில், மாநாடு நடைபெற உள்ளது, இது, வங்கித் துறையின் வளர்ச்சிக்கு, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்' என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|