பதிவு செய்த நாள்
01 நவ2011
00:09
புதுடில்லி: வங்கிகள் வழங்கும் கடனிற்கான வட்டி விகிதம் அதிகரித்து வருவதால், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, சென்ற செப்டம்பர் மாதம் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில் 3.3 சதவீதமாக இருந்தது.நடப்பு 2011-12ம் நிதியாண்டின், சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த முதல் அரையாண்டு காலத்தில், அடிப்படை கட்டமைப்பு துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி, 4.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது, சென்ற 2010-11ம் நிதியாண்டில் 5.6 சதவீதமாக உயர்ந்திருந்தது. பணவீக்கம்:நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரிசர்வ் வங்கி, கடந்த 19 மாதங்களில் 13 முறை வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால், வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 3.75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.இதனால், அனைத்து வகை கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்துள்ளது. பணவீக்கம் இரட்டை இலக்கைத் தாண்டியுள்ளதும், தொழில் உற்பத்தி வளர்ச்சி மந்தமடைய காரணமாக உள்ளது.நிலக்கரி:இதன்படி, அடிப்படை கட்டமைப்பு துறையில் இடம்பெற்றுள்ள முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி, இயற்கை எரிவாயு, உரம் ஆகியவற்றின் உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளது.செப்டம்பர் மாதத்தில் அடிப்படை கட்டமைப்பு துறையின் வளர்ச்சி, முந்தைய மாதத்தை விட 1.4 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இத்துறையின் வளர்ச்சி 3.7 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது.அடிப்படை கட்டமைப்பு துறையை பொருத்தவரை, நிலக்கரி உற்பத்தி அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சென்ற செப்டம்பர் மாதம், நிலக்கரி உற்பத்தி 17.8 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதே காலத்தில், இயற்கை எரிவாயு உற்பத்தி வளர்ச்சி 6.4 சதவீதமும், உரங்கள் உற்பத்தி 2.1 சதவீதமும் குறைந்துள்ளது.தெலுங்கானா பிரச்னை:நாட்டின் அனல் மின் நிலையங்களுக்கு அத்தியாவசிய மூலப் பொருளாக நிலக்கரி உள்ளது. ஆனால், ஆந்திராவில் தெலுங்கானா போராட்டத்தால் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள இடங்களில் கன மழை பெய்துள்ளதும், இதன் உற்பத்தி குறைய காரணமாகும்.பொதுத்துறையை சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், நாட்டில் நிலக்கரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், நிலக்கரி உற்பத்தி குறைந்துள்ளது. சிமென்ட்:அடிப்படை கட்டமைப்பு துறையின் வளர்ச்சியில், சிமென்ட் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளது. பள்ளிகூடங்கள், கல்லூரிகள்,மருத்துவமனைகள், குடியிருப்புகள் என அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் சிமென்ட் அத்தியாவசியமாக உள்ளது. சென்ற செப்டம்பரில், சிமென்ட் உற்பத்தி வளர்ச்சி, மிகச் சிறிய அளவில், அதாவது 0.9 சதவீதம் என்ற அளவிலேயே உயர்ந்துள்ளது. அது போன்று, நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தியும் 0.1 சதவீதம் என்ற அளவிற்கே அதிகரித்துள்ளது.எனினும், மதிப்பீட்டு காலத்தில், மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. நிலக்கரிக்கு பற்றாக்குறை உள்ள போதிலும் மின் உற்பத்தி வளர்ச்சி 8.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இருந்த போதிலும், இது முந்தைய மாதத்தை விட 0.5 சதவீதம் குறைவாகும். சென்ற ஆகஸ்ட் மாதம் நாட்டின் மின் உற்பத்தி 9.4 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டிருந்தது.உருக்கு:இதே போன்ற நிலைதான் உருக்கு துறையிலும் காணப்படுகிறது. இத்துறை, சென்ற செப்டம்பர் மாதத்தில் 6.6 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தின் 8 சதவீத வளர்ச்சியை விட குறைவாகும்.சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி 4.4 சதவீதம் உயர்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த தொழில் உற்பத்தியில், அடிப்படை கட்டமைப்பு துறைகளின் பங்களிப்பு 37.9 சதவீதமாக உள்ளது. தொழில் உற்பத்தி வளர்ச்சி குறித்த அறிக்கை, வரும் 12ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|