பதிவு செய்த நாள்
11 நவ2011
00:40
மும்பை:நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டின், ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான, 10 மாத காலத்தில், புதிய வெளியீடுகள், இரண்டாவது பங்கு வெளியீடு மற்றும் தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்த வகையில், 17 ஆயிரத்து 412 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே காலத்தில், 82 ஆயிரத்து 449 கோடி ரூபாயாக இருந்தது என, மூலதனச் சந்தை குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு வரும், பிரைம் டேட்டா பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிதிநெருக்கடி:அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலை, ஒரு சில ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடி போன்றவற்றால், சர்வதேச அளவில், நடப்பு 2011ம் ஆண்டில், இதுவரையி லுமாக, பங்கு வியாபாரம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது. இதனால், பல நிறுவனங்கள் பொது மக்களுக்குப் பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையிலிருந்து, நிதி திரட்டிக் கொள்வதை ஒத்தி போட்டு வருகின்றன.
வெளியீட்டு மதிப்பு:இருப்பினும், ஒரு சில நிறுவனங்கள், துணிந்து பங்கு வெளியீட்டை மேற்கொள்கின்றன. ஆனால், பல நிறுவனங்கள் பங்கின் வெளியீட்டு மதிப்பை, மிகவும் அதிகமாக நிர்ணயிக்கின்றன. இவற்றின் பங்குகள், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் போது, வெளியீட்டு விலையை விட, பல மடங்கு குறைந்த விலைக்கே கைமாறுகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் புதிய பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்வதைக் குறைப்பதுடன், இவ்வெளியீடுகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 2010-11ம் நிதியாண்டில், பங்கு வெளியீட்டை மேற்கொண்ட 50 நிறுவனங்களுள், நான்கில் மூன்று நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போயுள்ளது என, பங்குச் சந்தை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
முதலீட்டு வங்கிகள்:நிறுவனங்கள், அதிக ஆசை கொண்டு, எவ்வித நியாயமும் இல்லாமல், பங்குகளின் வெளியீட்டு விலையை அதிகமாக நிர்ணயிக்கின்றன. இதற்கு, நிறுவனங்கள் மட்டுமின்றி, ஆலோசனை மற்றும் முதலீட்டு வங்கிகளும், உடந்தையாக உள்ளன.அடிப்படை செயல்பாடுகள் நன்கு இல்லாத நிறுவனங்கள், இதுபோன்று அதிக விலை நிர்ணயித்து, பங்கு வெளியீட்டை மேற்கொள்வதால், அவற்றின் பங்குகள் பட்டியலிடப்படும் போது, மிகவும் குறைந்து போகிறது. இதுமட்டுமின்றி, நாட்டின் பங்கு வியாபாரம், மிகவும் மந்த நிலையில் உள்ளபோது, இதுபோன்ற நிறுவனப் பங்குகளின் விலை, மேலும் சரிவடைந்து போகிறது.நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டின், முதல் பத்து மாதங்களில், 37 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன. 8 நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, பங்குகளை ஒதுக்கீடு செய்து நிதி திரட்டிக் கொண்டுள்ளன.
மூலதனச் சந்தை:அதேசமயம், கடந்த 2010ம் ஆண்டின் இதே காலத்தில், புதிய வெளியீடுகள் மூலம், 55 நிறுவனங்கள் நிதி திரட்டிக் கொண்டன. 56 நிறுவனங்கள், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கீடு செய்து, மூலதனச் சந்தையில் களமிறங்கின.நடப்பாண்டில், இதுவரை பங்கு வெளியீட்டை மேற்கொண்ட பல நிறுவனங்கள், 100 கோடி ரூபாய்க்கும் குறைவான அளவிற்கே, மூலதனச் சந்தையிலிருந்து, நிதி திரட்டிக் கொண்டுள்ளன. மிகப் பெரிய வெளியீடுகள் அதிகளவில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுள் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, நடப்பு முழு நிதியாண்டில், 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், பங்குச் சந்தை சாதகமாக இல்லாததால், இதுவரை, பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள, மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம், 4,500 கோடி ரூபாய் மட்டுமே திரட்டிக் கொண்டுள்ளது.
பொதுத் துறை நிறுவனங்கள்:ஆனால், கடந்த 2010ம் ஆண்டின் இதே காலத்தில், மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக, 17 ஆயிரத்து 221 கோடி ரூபாயை திரட்டிக் கொண்டது.நாட்டின் பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், பொதுத் துறையைச் சேர்ந்த,"செயில்', இந்தியன் பேங்க், ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா உள்ளிட்ட பல நிறுவனங்கள், பங்கு வெளியீட்டை தொடர்ந்து ஒத்தி போட்டு வருகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|