பதிவு செய்த நாள்
11 நவ2011
00:42
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் (2011-12), சென்ற செப்டம்பருடன் முடிந்த காலாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்நிறுவனங்கள், அதிக அளவில் கடன் பெற்று, கச்சா எண்ணெய் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.மத்திய அரசு, 2010ம் ஆண்டு ஜூன் மாதம், பெட்ரோல் மீதான விலை கட்டுப்பாட்டை நீக்கியது. இதையடுத்து, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 46 ரூபாயில் இருந்து 49 ரூபாய் என்ற அளவில் வீழ்ச்சி கண்டதால், இழப்பை கட்டுப்படுத்த முடியாத இந்நிறுவனங்கள், கடந்த வாரம், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.80 ரூபாய் என்ற அளவில் உயர்த்தின.கடந்த ஒன்றரை ஆண்டில் பெட்ரோல் விலை கிடு... கிடு... வென உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும், இதுவரை 5 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை உற்பத்தி விலைக்கும் குறைவாக வழங்கி வருவதால்,இந்நிறுவனங்கள் நாளொன்றுக்கு, 333 கோடி ரூபாய் என்ற அளவிற்கு இழப்பை சந்தித்து வருகின்றன. இதன்படி,சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில், இந்நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்த மாக, 14 ஆயிரத்து 400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 7,846 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் இந்நிறுவனம், 5,294 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 3,364 கோடி ரூபாயும், பாரத் பெட்ரோலியம் 3,229 கோடி ரூபாயும் இழப்பை சந்தித்துள்ளன.பெட்ரோல் விற்பனையில் மட்டும், இந்நிறுவனங்களின் மொத்த இழப்பு 2,468 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.இத்தகைய இழப்பு காரணமாக, இந்நிறுவனங்களால் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு போதுமான நிதியை திரட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இவை, கடன் பெற்று கச்சா எண்ணெயை வாங்கி வருகின்றன. இதுவரை இல்லாத அளவிற்கு, எண்ணெய் நிறுவனங்களின் கடன் ”மை, 1 லட்சத்து 19 ஆயிரத்து 282 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த கடன் இலக்கில் (4 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்) நான்கில் ஒரு பங்காகும்.டீசல்,மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றை அடக்க விலைக்கும் குறைவாக விற்பனை செய்வதால்,நடப்பு நிதியாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு 1 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று, பெட்ரோலிய துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார். இதே நிலை தொடர்ந்தால், எண்ணெய் நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|