பதிவு செய்த நாள்
13 நவ2011
03:13
கொச்சி : இந்தியாவின் மிளகு உற்பத்தி, நடப்பு 2011-12ம் பயிர் பருவத்தில், 5 ஆயிரம் டன் குறைந்து 43 ஆயிரம் டன்னாக குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற 2010-11ம் பயிர் பருவத்தில் 48 ஆயிரம் டன்னாக இருந்தது. கோழிக்கோட்டில் தலைமை அலுவலகத்தை கொண்டுள்ள கோக்கோ, பாக்கு மற்றும் நறுமணப் பொருள்கள் மேம்பாட்டு இயக்குனரகம் (டாஸ்டு), கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மிளகு உற்பத்தி குறித்து ஆய்வு மேற்கொண்டது.
விளைச்சல்: மிளகு விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அதிக அளவில் பூச்சித் தாக்குதல் காரணமாக, நடப்பு பயிர் பருவத்தில் மிளகு உற்பத்தி குறையும் என்று தெரியவந்துள்ளது. மேலும், மிளகு மாதிரிகளை ஆய்வு செய்ததிலும், பூச்சி தாக்குதல் காரணமாக, அவற்றின் விளைச்சல் குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவை பொறுத்தவரை, கர்நாடகாவில் அதிக அளவில் மிளகு உற்பத்தியாகிறது. நடப்பு பருவத்தில், இம் மாநிலத்தின் மிளகு உற்பத்தி 25 ஆயிரம் டன்னாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் நடப்பு பருவத்தில் மிளகு உற்பத்தி 13 ஆயிரம் டன்னாக இருக்கும் என தெரிகிறது. தமிழகம் 5,000 டன் அளவிற்கு மிளகு உற்பத்தி மேற்கொள்ளும் என,"டாஸ்டு' மதிப்பிட்டுள்ளது. எனினும், இது குறித்த இறுதி ஆய்வறிக்கை, வரும் சர்வதேச மிளகு கழக (ஐ.பி.சி) மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது.
குறைவு: கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு, இந்தியா மிளகு உற்பத்தியில் சிறந்து விளங்கியது. அப்போது நாட்டின் மிளகு உற்பத்தி 1 லட்சம் டன் என்ற அளவில் மிகவும் உயர்ந்திருந்தது. இந்த உற்பத்தி, படிப்படியாக குறைந்து தற்போது, 50 ஆயிரம் டன்னுக்கும் குறைவாக சரிவடைந்துள்ளது. இந்தியாவின் மிளகு உற்பத்தி 50 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளதையடுத்து, அதன் ஏற்றுமதியும் குறைந்துள்ளது.
கேரளாவில், ரப்பர், மிளகு மற்றும் நறுமணப் பொருள்கள் அதிகம் விளைகின்றன. எனினும், அதிக ஆதாயம் தரும் ரப்பர் உற்பத்தியில் தான் கேரள விவசாயிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் மிளகு பயிரிடும் பரப்பளவு, கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக, இம்மாநிலத்தின் மிளகு உற்பத்தி சரிவடைந்து வருகிறது. மிளகு பயிரிடும் பரப்பில், பிற பணப்பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
மேலும், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாலும் மிளகு பயிரிடுவது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து, கேரள வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் சந்தை நுண்ணறிவு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில், கடந்த ஒன்பது ஆண்டுகளில், கேரளாவில் மிளகு பயிரிடும் பரப்பளவு 24 சதவீதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், இம்மாநிலத்தின் மிளகு உற்பத்தி 50 சதவீதத்திற்கும் மேலாக சரிவடைந்துள்ளது.
வர்த்தகர்கள்: கர்நாடகாவை பொறுத்தவரை, பாசன வசதி கொண்ட காபி தோட்டங்களில் மிளகு பயிரிடப்படுகிறது. அதனால், பருவமழையால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள்,இம்மாநிலத்தின் மிளகு உற்பத்தியை பெரிய அளவில் பாதிக்காத நிலை உள்ளது.
சர்வதேச மிளகு கழகம், பல்வேறு நாடுகளில், அதிக அளவில் மிளகு விளையும் மாநில அரசுகளிடம் அதன் உற்பத்தி குறித்த விவரங்களை பெற்று வருகிறது. மேலும், பன்னாட்டு மிளகு வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் பெறும் விவரங்களைத் தொகுத்து, சர்வதேச மிளகு உற்பத்தி குறித்த தற்காலிக மதிப்பீட்டை தயாரித்துள்ளது.
எனினும், பெரும்பாலான வர்த்தகர்கள், மிளகு உற்பத்தி குறித்த ஐ.பி.சி-யின் தற்காலிக மதிப்பீடு சரியல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர். உலகில், மிளகு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள வியட்னாம் மற்றும் இந்தோனேஷியா, இந்தியா ஆகிய நாடுகள், மிளகு உற்பத்தியை குறைத்து மதிப்பிட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இந்நாடுகள் வெளியிட்டுள்ள, மிளகு கையிருப்பு குறித்த தகவலும், உண்மைக்கு மாறானது என அவர்கள் தெரிவித்துள்ளனர். மிளகு உற்பத்தி குறித்து உறுதியாக தெரியாததால், அதன் வர்த்தகத்திலும், விலையிலும், ஏற்றத்தாழ்வு காணப்படுவதாக கூறப்படுகிறது.
கையிருப்பு: இந்தியாவில் இவ்வாண்டு இறுதி நிலவரப்படி, மிளகு கையிருப்பு 15 ஆயிரம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மிளகு உற்பத்தி, சென்ற 2010-11ம் ஆண்டு 48 ஆயிரம் டன்னாக இருந்தது. இது, முந்தைய 2009-10ம் நிதியாண்டில், 50 ஆயிரம் டன்னாக உயர்ந்து காணப்பட்டது. நடப்பு 2011ம் ஆண்டின் தொடக்கத்தில், மிளகு கையிருப்பு 14ஆயிரத்து 500 டன்னாக இருந்தது. நடப்பாண்டில், மிளகு பயன்பாடு 4,500 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மிளகு விலை உயர்வு காரணமாக, அதன் பயன்பாடு 10 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|