பதிவு செய்த நாள்
13 நவ2011
11:18
தமிழக அரசுக்குச் சொந்தமான, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்.,), செய்தித்தாள் தயாரிப்புப் பணியை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. வெறும் காகிதத் தயாரிப்பை மட்டும் தொடர்கிறது.தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், 1984ல், தமிழக அரசால் துவக்கப்பட்டது. பத்திரிகைகளுக்கான செய்தித்தாள்கள் மற்றும் அச்சு காகிதத் தயாரிப்பில், 23 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. முதல் ஐந்து ஆண்டுகள் தத்தித் தத்தி இயங்கிய இந்நிறுவனம், 1989ல், இருந்தே லாபத்தில் தான் இயங்கி வருகிறது. மிகச் சில ஆண்டுகளைத் தவிர, அனைத்து ஆண்டுகளிலும் ஏறுமுகம் தான். சமீபத்தில் கூட, கடந்த ஆண்டுக்கான ஈவுத் தொகையில், தமிழக அரசின் பங்கான, 12 கோடியே 22 லட்சம் ரூபாயை, முதல்வரிடம், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் ஒப்படைத்தது.எல்லாமே சுமுகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில், இனிமேல் செய்தித்தாள்களையே தயாரிப்பதில்லை என்ற அதிர்ச்சி முடிவை, மூன்று ஆண்டுகளுக்கு முன், டி.என்.பி.எல்., எடுத்துள்ளது. நிறுவனத்தின் பெயரிலேயே செய்தித்தாள் இருக்கும் நிலையில், டி.என்.பி.எல்.,லின் இந்த முடிவு சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் உயரதிகாரி கூறியதாவது:அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில், லாபத்தில் இயங்கிவரும் மிகச் சில நிறுவனங்களில் டி.என்.பி.எல்.,லும் ஒன்று. இதற்குக் காரணம், காலத்துக்கேற்ற முடிவுகளை இயக்குனர்கள் குழு எடுப்பதே. அப்படி ஒரு முடிவு தான், செய்தித்தாள் தயாரிப்பை நிறுத்துவதும். அச்சுக் காகிதங்களின் விற்பனை மதிப்பு, ஒரு டன்னுக்கு, 43 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது. அதுவே, செய்தித்தாள்களின் விற்பனை மதிப்பைக் கணக்கிட்டால், நல்ல நாட்களிலேயே ஒரு டன்னுக்கு, 33 ஆயிரம் ரூபாய் தான் கிடைக்கும். சில நேரங்களில் அதை விடவும் குறைவாகக் கிடைக்கும். சந்தைப்படுத்தல் மற்றும் உற்பத்திக் கோணத்தில் ஆராய்ந்து தான், இனி செய்தித்தாள்களைத் தயாரிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், இந்த முடிவின் மூலம் தான் எங்கள் நிறுவனம் இழப்பைத் தவிர்த்தது. வெறும் செய்தித்தாள்களை மட்டுமே தயாரித்து வரும் நான்கைந்து தனியார் நிறுவனங்கள், மூடுவிழாவை நோக்கி சென்றுகொண்டிருப்பதன் மூலம், இதைப் புரிந்துகொள்ளலாம்.
டி.என்.பி.எல்.,லின் இந்த முடிவால், காகிதக்கூழ் தயாரிக்கும் ஒரே ஒரு இயந்திரம் மட்டும் பயன்படுத்தப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட அந்த இயந்திரத்தின் இன்றைய சந்தை மதிப்பு, ஐந்து கோடி ரூபாய் இருக்கும். ஆனாலும், அந்த இயந்திரத்தின் பல்வேறு பாகங்களை, வேறு வேறு இயந்திரங்களுக்கு பயன்படுத்திக்கொண்டோம்.அரசுக்கும் எங்களால் எந்த இழப்பும் ஏற்படவில்லை. எங்களின் மிகப் பெரிய வாடிக்கையாளர்களான தமிழ்நாடு பாடநூல் கழகமும், தமிழ்நாடு எழுதுபொருள் அச்சுத் துறையும் நூறு சதவீதம் காகிதங்களை எங்களிடம் தான் கொள்முதல் செய்கின்றன. ஆண்டுதோறும் கொள்முதல் அளவு அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.ஆனால், இந்த முடிவு எடுக்கப்பட்ட, 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் ஏன் பெரியளவு லாபம் அதிகரிக்கவில்லை என்பதற்கான பதிலை, அவர்களால் சொல்ல முடியவில்லை.
லாபம் அளவு
ஆண்டு கோடி
2005 101
2006 125
2007 163
2008 158
2009 158
2010 195
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|