பதிவு செய்த நாள்
17 நவ2011
12:24
சென்னை : ""சமையல் காஸ் தட்டுப்பாட்டை போக்க, விடுமுறை நாட்களிலும் சிலிண்டர்கள் நிரப்பவும், சிலிண்டர்கள் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் தட்டுப்பாடு தீரும்,'' என, இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் அதிக அளவில், சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்பிய செய்திக்குறிப்பு: கடந்த சில வாரங்களாக, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் லாரி தொழிலாளர்களின் பிரச்னைகளால், இந்த நிலைமை ஏற்பட்டது. தமிழக அரசின் ஒத்துழைப்புடன், பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.
எண்ணூர் சிலிண்டர் நிரப்பு மையத்திலிருந்து, சென்னைக்கு வரும் சாலை, மிக மோசமாக இருப்பதாலும், பருவமழையாலும், சிலிண்டர்கள் அனுப்பும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது, சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், அதிக அளவில் சிலிண்டர்களை வினியோகிக்க, இந்தியன் ஆயில் நிறுவனம் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சென்னையில், சிலிண்டர் நிரப்பும் மூன்று மையங்களிலும், வழக்கமான நேரத்தை விட, கூடுதல் நேரமும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும், சிலிண்டர்களில் காஸ் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நெருக்கடி நிலைமையை சமாளிக்க, சமையல் காஸ் சிலிண்டர் நுகர்வோர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். தட்டுப்பாட்டை விரைவில் தீர்ப்பதற்கு, இந்தியன் ஆயில் நிறுவனம் அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. மிக விரைவில், தட்டுப்பாடு தீரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|