பதிவு செய்த நாள்
26 நவ2011
00:31
இந்தியாவில், கட்டுமான இயந்திரங்கள் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள ஜே.சி.பீ. இந்தியா நிறுவனம், கிராமப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் அதன் வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.பெங்களூருவில் நடைபெற்று வரும் "எக்ஸ்கான் 2011' சர்வதேச கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சியில், ஜே.சி.பீ. இந்தியா நிறுவனம் அதன் நான்கு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கட்டடங்களை இடிப்பது, நிலத்தை ஆழமாக தோண்டுவது, மணல் அள்ளுவது உள்ளிட்ட பணிகளுக்கான அதிக ஆற்றல் கொண்ட, பேக்ஹோ லோடர் இயந்திர வாகனங்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அகழ்வாய்வு பணிகள் உள்ளிட்டவற்றுக்கு உதவும் ஜே.எஸ்.120 எக்ஸவேட்டர் இயந்திரம், 430 இசட் எக்ஸ் வீல்டு லோடர், 15 டன் சுமையை தூக்க வல்ல லிப்ட்டால் 1553/1554 இயந்திரம் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இது குறித்து ஜே.சி.பீ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி விபின் சோதி கூறும்போது, "பேக்ஹோ லோடர் இயந்திரங்களில், புதிய சக்தி வாய்ந்த, "எகோமேக்ஸ்' என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்துக்கு வெளியே, முதன் முதலாக இந்த என்ஜின்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பலாப்கர் தொழிற்சாலையில் எரிபொருள் சிக்கனத்துடன், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பீ.எஸ்3 தரத்தில் இவை உருவாக்கப்படுகின்றன.இத்தொழிற்சாலை, நாளொன்றுக்கு 300 பேக்ஹோ லோடர்கள் தயாரிக்கும் திறன் கொண்டது' என தெரிவித்தார்.சென்ற ஆண்டு 21 ஆயிரம் கட்டுமான இயந்திரங்களை விற்பனை செய்துள்ள ஜே.சி.பீ. இந்தியா நிறுவனம், பேக்ஹோ லோடர் விற்பனையில், நாட்டில் முதலிடத்தில் உள்ளது. 400க்கும் மேற்பட்ட முகவர்கள் மூலம் வாடிக்கையாளர் சேவையை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் விற்றுமுதல், சென்ற 2010-11ம் நிதியாண்டில் 45 சதவீதத்திற்கும் மேலாக வளர்ச்சி கண்டு 100 கோடி டாலரை (5ஆயிரம் கோடி ரூபாய்) தாண்டியுள்ளது."நடப்பு நிதியாண்டில், வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக, கிராமப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் மேலும் வலுவாக காலூன்ற உள்ளோம்' என்கிறார் விபின்சோதிபெங்களுர் சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற்று வரும் "எக்ஸ்கான் 2011' கட்டுமான இயந்திர கண்காட்சி நாளையுடன் முடிவடைகிறது. இங்கு 650க்கும் மேற்பட்ட கட்டுமான இயந்திர நிறுவனங்கள், அவற்றின் தயாரிப்புகளை பார்வைக்கு வைத்துள்ளன. அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன. உலகளவில், கட்டுமான இயந்திர துறையில் நவீன தொழில்நுட்பத்திலான புதிய கண்டுபிடிப்புகளை ஒரே இடத்தில் காண இக்கண்காட்சி வாய்ப்பளித்துள்ளது.- நமது சிறப்பு நிருபர் -
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|