பதிவு செய்த நாள்
29 நவ2011
00:03
- வீ.அரிகரசுதன் -
தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில், முறைப்படியான சலுகைககள் வழங்கப்படாததால், அங்கு தொழில் நிறுவனங்களை அமைக்க முதலீட்டாளர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது.மத்திய அரசு, நாட்டில் தொழில் வளங்களை மேம்படுத்தி, வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காகவும், ஏற்றுமதி தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கவும், கடந்த 2000ம் ஆண்டு நாடு முழுவதும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்க முடிவு செய்தது.இதற்காக, 2005ல், சட்டம் இயற்றி, 2006ல் அதற்கான விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி, சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குபவர்களுக்கு, 15 ஆண்டுகளில், 10 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதில், தொழில் நிறுவனங்களை துவங்கும் நிறுவனங்களுக்கு, முதல் ஐந்து ஆண்டுகளுக்கு, 100 Œதவீத வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இரண்டாவது ஐந்தாண்டில், 50 சதவீதமும், மூன்றாவது ஐந்தாண்டில், லாபத்தின் அளவை பொறுத்தும் வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மாநில அரசின் சார்பில், உள்ளூர் வரி, நில வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றுக்கு, விலக்கு அளிக்கப்படும் என்பதுடன், எந்த புதிய வரிகள் விதித்தாலும், அது சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள, நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நாடு முழுவதும் பொறியியல், பல் பொருள் சிறப்பு பொருளாதாரம், தோல், ஜவுளி பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறை Œõர்ந்த நிறுவனங்கள் அமைக்க, 585 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு முறைப்படியான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க முடிவு செய்தன. இதில், தற்போது, 143 மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன.தமிழகத்தில், தகவல் தொழில்நுட்பம், பல் பொருள், பொறியியல் உள்ளிட்ட, 71 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதில், 28 மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை, டிட்கோ, சிப்காட், எல்காட் மற்றும் தனியார் நிறுவனங்கள் அமைத்து வருகின்றன.தமிழக சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள, நிறுவனங்களுக்கு உள்ளூர் வரி, நில வரி, சொத்து வரி, விற்றுமுதல் வரி உள்ளிட்டவை விதிக்கப்படுகிறது.
மேலும், அடிப்படை கட்டுமான வசதிகளுக்கான கட்டணம் என்று ஒரு சதுர அடிக்கு, 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, முதலீட்டார்கள் மத்தியில், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், மத்திய அரசு, கடந்த ஆண்டு கொண்டு வந்த நேரடி வரி விதிப்பு முறையால், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன.
மேலும், வரும் 2014ம் ஆண்டு வரை மட்டுமே சலுகைகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது, முதலீட்டாளர்களை சோர்வடைய செய்துள்ளது.இதனால், இம்மண்டங்களில் தொழில் நிறுவனங்களை அமைக்க முதலீட்டாளர்களிடையே, ஆர்வம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதிலும், பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு, சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு வழங்கப்படும், சலுகைகளை சட்டமாக கொண்டு வந்தால் மட்டுமே, பல்வேறு நிறுவனங்கள் நம்பிக்கையுடன், தமிழக சிறப்பு பொருளாதார மண்டங்களில் முதலீடு செய்யும் சூழல் ஏற்படும். இதுகுறித்து, சிறப்பு பொருளாதார மண்டங்களை மேம்படுத்துவோர், சங்க துணை தலைவர் சரவணன் கூறியதாவது:தமிழகத்தில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பரவலாக ஏற்படுத்தப்பட்டதன் மூலம், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு, இம்மண்டலங்களில் அமைக்கும் தொழில் நிறுவனங்களுக்கு, மாநில அரசு பல சலுகைகளை அறிவித்து, கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியது.
ஆனால், இதை சட்டமாக கொண்டு வராததால், முறைப்படி சலுகைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சரவணன் கூறினார்.இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, "வரி வருவாய், பாதிக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே, தமிழக அரசு சலுகைகளை அமல்படுத்துவதில் தயக்கம் காட்டி வருகிறது' என்றார்.3 லட்சம் வேலைவாய்ப்புசென்ற ஜூன் மாதம் வரை, நாட்டில் உள்ள அனைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களிலுமாக, 2 லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் மூலம், 7 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 6 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.தமிழகத்தில் மட்டும், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செயப்பட்டுள்ளது. இதன் மூலம், 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்றுமதியில் பின்னடைவு
தமிழக சிறப்பு பொருளதார மண்டலங்களிலிருந்து, கடந்த 2010-11ம் நிதியாண்டில், 43 ஆயிரத்து 705 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், குஜராத்தில், 13 மண்டலங்கள் மூலம், 1 லட்சத்து, 46 ஆயிரத்து, 877 கோடி ரூபாயும், கர்நாடகத்தில், 20 மண்டலங்கள் மூலம், 46 ஆயிரத்து, 718 கோடி ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், அதிக எண்ணிக்கையில் சிறப்பு பொருளாதார மண்டங்கள் இருந்தாலும், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது, ஏற்றுமதியின் மதிப்பு குறைவாகவே உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|