பதிவு செய்த நாள்
04 டிச2011
23:38
- திருமை.பா. ஸ்ரீதரன் -
டி.வி.எஸ்., குழுமத்தின் ஓர் அங்கமான சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனம், மோட்டார் வாகனத் துறைகளுக்கு தேவையான போல்டு, நட்டு, ரேடியேட்டர் மூடி, வாட்டர் மற்றும் ஆயில் பம்புகள், இன்ஜின் பாகங்கள், கியர் ஷிப்டர்ஸ், வால்வு டிரைன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிறுவனத்திற்கு உள்நாட்டில், சென்னை, மதுரை, புதுச்சேரி, ஓசூர், மகிந்திரா சிட்டி, ஐதராபாத், ருத்ராபூர் (உத்தரகண்ட்) ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. சீனா, இங்கிலாந்து மற்றும் ஜெர்மன் ஆகிய நாடுகளிலும், தொழிற்சாலைகள் இடம் பெற்றுள்ளன.இன்று, ஆண்டுக்கு 2,300 கோடி ரூபாய் விற்று முதல் ஈட்டும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ள இந்நிறுவனத்தில், இந்தியாவில் மட்டும், 3,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக, சுரேஷ் கிருஷ்ணா செயல்பட்டு வருகிறார்.1966ம் ஆண்டு, சிறிய தொழில் நிறுவனம் என்ற அடிப்படையில், 7,500 சதுர அடியில், 450 டன் உற்பத்தித் திறனில், சென்னை - அம்பத்தூரில், போல்ட், நட்டுகள் தயாரிப்பில் களம் இறங்கினார் சுரேஷ் கிருஷ்ணா.இவருடைய தொலைநோக்கு பார்வை மற்றும் சீரிய திட்டமிடல் போன்றவற்றால், சீனாவிலும் தொழிற்சாலை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். இந்தியாவிலிருந்து, சீனா சென்று தொழில் தொடங்கிய, ஒரு சில நிறுவனங்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வரும் நிலையில், சுந்தரம் பாஸனர்ஸ் லாபம் ஈட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"கடின உழைப்பு, தொலைநோக்கு பார்வை மற்றும் கடவுள் அருள் இருந்தால் வாழ்க்கையில், நிச்சயம் வெற்றி காணலாம்' என்று கூறும் சுரேஷ் கிருஷ்ணா, "தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியின் சாராம்சம்...
முதலில் தொழில் தொடங்கிய போது, எதிர்கொண்ட சவால்கள்...?
ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பு படித்த பிறகு, வீல்ஸ் இந்தியாவில், பணியில் சேர்ந்தேன். அப்போது என்னுடைய சித்தப்பாவும், டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் வேணு ஸ்ரீனிவாசனின் தந்தையுமான டி.எஸ்.ஸ்ரீனிவாசன், உள்நாட்டில், போல்டு, நட்டுகளுக்கான தேவை வளர்ச்சிகண்டு வருகிறது.எனவே, இதுதொடர்பான தயாரிப்பில் இறங்கும்படி ஆலோசனை கூறினர். அதன் அடிப்படையில், 1966ம் ஆண்டு, அம்பத்தூரில், சிறிய அளவில் மோட்டார் வாகனத் துறைக்கு தேவையான போல்டு, நட்டுகள் தயாரிப்பதற்காக, 7 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.அப்போதெல்லாம், தொழில் தொடங்குவதற்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தன. தொழிற்சாலை உரிமம் பெறுவதற்கே, மிகவும் கஷ்டப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்துவது என்பது எளிதான காரியம் அல்ல.அப்போது சந்தையில், மும்பையில் பிட்டைட் மற்றும் கோல்கட்டாவில் கெஸ்ட் கீன் வில்லியம்ஸ் (ஜி.கே.டபிள்யூ.) என்ற இரண்டு பெரிய நிறுவனங்கள் போட்டியாளர்களாக இருந்தன. அவர்கள் போல்டு, நட்டுகளை கிலோ கணக்கில் விற்கும் போது, எங்கள் நிறுவனம், எண்ணிக்கையில் இவற்றை விற்று வந்தது.
ஒரு கால கட்டத்தில், மேற்கண்ட இரு நிறுவனங்களுமே அவற்றின் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டன. அது, எங்கள் நிறுவனத்திற்கு வாய்ப்பாக அமைந்தது. அதிக எண்ணிக்கையில், வாடிக்கை நிறுவனங்கள் வரத் தொடங்கின. டாட்டா மற்றும் அசோக் லேலண்டு ஆகிய நிறுவனங்களுக்கும், போல்ட், நட்டுகள் அளிக்கத் தொடங்கினோம்.அம்பத்தூரில், செயல்பட்டு வந்த தொழிற்சாலை, சென்னை -பாடிக்கு இடம் மாறியது. உற்பத்தித்திறன், 2,400 டன்னாக உயர்ந்தது. டி.வி.எஸ்., குழுமத்திற்கு இருந்த "நம்பகத்தன்மை'யை பேணிக்காக்கும் வகையில், மிகவும் தரமான போல்டு, நட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டன. நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து, தொழிற்சாலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இன்று, சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனம், ஆண்டுக்கு, 70 ஆயிரம் டன் உற்பத்தித்திறனில் போல்டு, நட்டுகள் தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
உங்களுடைய தொடர் வெற்றிக்கான ரகசியம் மற்றும் சீனாவில் களமிறங்கியது குறித்து கூறவும்...
கடின உழைப்பு, குறிக்கோளுடன் திட்டமிடல் மற்றும் கடவுளின் அருள் ஆகியவை இருந்தால், எந்த ஒரு மனிதரும் வாழ்க்கையில், வெற்றி பெறலாம்.
என்னுடைய 30 வயதிலிருந்து, 30 ஆண்டுகள் கடுமையாக போராட வேண்டியிருந்தது. முன்பெல்லாம், மோட்டார் வாகனம் உள்ளிட்ட பல துறைகளில் ஈடுபட்டு வந்த இந்திய நிறுவனங்கள், அன்னிய நிறுவனங்களின் கூட்டுடன் தொழிலில் களம் இறங்கின.ஆனால், என்னைப் பொறுத்த வரையில் எக்காரணம் கொண்டும், அன்னிய நிறுவனங்களுடன் கூட்டு கொள்வதில்லை என்ற குறிக்கோளோடு, இன்று வரை செயல்பட்டு வருகிறேன். இந்திய மக்களிடம் அளவிட முடியாத அளவிற்கு நிபுணத்துவம் உள்ளது. எனவே, நாம் எவருடனும் கூட்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
சிறு தொழில் நிறுவனமாக, தொடங்கப்பட்ட சுந்தரம் பாஸனர்ஸ், இன்று பன்னாட்டு நிறுவனமாக உருவெடுத்துள்ளதற்கு, நான் மட்டும் காரணம் என்று கூறி விட முடியாது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக செயல்படும் ஆயிரக்கணக்கான எங்களுடைய பணியாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை, தொழிலாளர் பிரச்னை, வேலை நிறுத்தம் என்று எதுவுமே இல்லாமல் பயணித்து வருகிறோம். இதற்கு, நிர்வாகம், தொழிலாளர்களுடன் இணைந்து செயல்படும் அணுகுமுறையே காரணமாகும்.
சீனாவில்
உள்நாட்டில் தொழிற்சாலைகள் சிறப்பாக செயல்பட்டு வரும் அதே நேரத்தில், சீனாவில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டோம்.
இதற்காக, இரண்டு ஆண்டுகள் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவாக 2003ம் ஆண்டில், 50 லட்சம் டாலர் (20 கோடி ரூபாய்) முதலீட்டில், தொழிற்சாலை அமைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 14 மாதங்களில், தொழிற்சாலை அமைக்கப்பட்டு, 2004ம் ஆண்டு மே மாதத்தில், உயர்திறன் கொண்ட போல்டு மற்றும் நட்டுகள் தயாரிப்பு தொடங்கியது.
சீனாவில், மிகச் சிறந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக, எவ்வித குறுக்கீடுகளும் இல்லாத வெளிப்படையான கொள்கை திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. ஒற்றை சாளர முறையின் கீழ், தொழில் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. இது போன்றவற்றால் தான், சீனாவில் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
போல்டு, நட்டு உள்ளிட்ட பாஸனர்களில் உங்களுக்குள்ள வலிமை மற்றும் இதர தயாரிப்புகள் பற்றி...
போல்டு, நட்டு உள்ளிட்ட பாஸனர்களுக்கான, இந்திய சந்தையில், நிறுவனம் 55 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. மொத்த உற்பத்தியில், 90 சதவீத பாகங்கள் தயாரிப்புத் துறை நிறுவனங்களுக்கு நேரிடையாக வழங்கப்படுகின்றன. மீதமுள்ள உதிரி பாகங்கள் இரண்டாம் நிலை சந்தைக்கு (சில்லரை வர்த்தகம்) விற்கப்படுகின்றன.
பாஸனர்கள் தயாரிப்பில், எங்களுடைய வலிமைக்கு முக்கிய காரணம், நிறுவனத்திடம், சிறிய திருகு ஆணி முதல் மிகப் பெரிய போல்டு, நட்டுகள் வரை தயாரிப்பதற்கான, 1 லட்சத்திற்கும் அதிகமான உற்பத்தி உபகரண கருவிகள் உள்ளன.
இவற்றின் வாயிலாக, மோட்டார் வாகனத் துறை மட்டுமின்றி, காற்றாலைகள், பிரிட்ஜ், வாஷிங் மிஷின், ஏ.சி., சாதனங்கள், கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தேவையான பாஸனர்களை எங்களால் தயாரிக்க முடிகிறது.
ரேடியேட்டர் மூடிகள் தயாரிப்பில் எவ்வாறு ஈடுபடத் தொடங்கினீர்கள்?
"மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது' என்பது போன்றது எங்களுடைய ரேடியேட்டர் மூடிகள் தயாரிப்பு பிரிவு. சர்வதேச அளவில் சுந்தரம் பாஸனர்சின் இந்தப் பிரிவு மிகவும் பிரபலமானதாகும். சர்வதேச நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் (ஜி.எம்.), இங்கிலாந்தில் அதன் இரண்டு, ரேடியேட்டர் தயாரிப்புப் பிரிவுகளை விற்பனை செய்வதாக அறிவித்தது. அதன் அடிப்படையில், 1992ம் ஆண்டு, டிசம்பர் மாதம், அவ்விரு பிரிவுகளும் வாங்கப்பட்டு, இயந்திர சாதனங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. தொழில் பிரிவு நிறுவப்பட்டு,1993ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், ரேடியேட்டர் மூடிகள் தயாரிக்கப்பட்டு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
குறைந்த காலத்தில், உலகளவில், 27 இடங்களில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு, 10 லட்சம் ரேடியேட்டர் மூடிகள் அனுப்பப்பட்டன. இதுநாள் வரை, முழு அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த ரேடியேட்டர் மூடிகள், தற்போது தான் குறைந்த அளவில் உள்நாட்டில் உள்ள, வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்படுகின்றன.
நிறுவனம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது? இளைய தலைமுறையினரின் ஈடுபாடு குறித்து...
டி.வி.எஸ்., குழும நிறுவனங்கள், தற்போது மூன்றாவது தலைமுறையினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதுநாள் வரையில், "டி.வி.எஸ்.,' என்ற மிகப்பெரிய பிராண்டிற்கு வலு சேர்க்கும் வகையில், குழும நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. எங்கள் குழுமத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களும், புதிய உத்வேகத்துடன், பாரம்பரியத்தை பேணி காக்கும் வகையில் களமிறங்கியுள்ளனர்.
சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனத்தை பொறுத்த வரையில், என்னுடைய இரண்டு மகள்களும், இயக்குனர் குழுமத்தில் இடம்பெற்று, திறம்பட பணியாற்றி வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|