பதிவு செய்த நாள்
04 டிச2011
23:44
மும்பை: இந்திய நிறுவனங்கள், அயல்நாடுகளில் மேற்கொண்ட முதலீடு, நடப்பு நிதியாண்டில், சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சென்ற நவம்பர் மாதத்தில், இந்திய நிறுவனங்கள், கூட்டுத் திட்டங்கள் மூலமாகவும் மற்றும் முற்றிலும் சொந்தமான துணை நிறுவனங்களின் வாயிலாகவும், வெளிநாடுகளில் மேற்கொண்ட முதலீடு, 274 கோடி டாலராக (13 ஆயிரத்து 700 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.இது, இதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில், 206 கோடி டாலராக (10 ஆயிரத்து 300 கோடி ரூபாய்) குறைந்து காணப்பட்டது.தற்போதுள்ள நிலையில், இந்தியாவுடன் ஒப்பிடுகையில், வெளிநாடுகளில் சொத்துக்களின் மதிப்பு, மிகவும் குறைவாக உள்ளதே, இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்திய நிறுவனங்கள், நடப்பு ஆண்டில், இதுவரையிலுமாக, அயல்நாடுகளில் மேற்கொண்ட முதலீடு, 2,381 கோடி டாலர் (1 லட்சத்து 19 ஆயிரத்து 50 கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது.
சென்ற நவம்பர் மாதத்தில், மிக அதிகளவாக, இந்தியாவின் பேப் இந்தியா ஓவர்சீஸ் நிறுவனம், 68 கோடி டாலரை (3,400 கோடி ரூபாய்), அதன் கூட்டு நிறுவனமான இங்கிலாந்தின், ஜேவி ஈஸ்ட் நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்துள்ளது.இதையடுத்து, சம்வர்தனா மதர்சன் பாலிமர்ஸ் நிறுவனம், நெதர்லாந்தில் உள்ள இதன் துணை நிறுவனமான சம்வர்தனா மதர்சன் பீவி நிறுவனத்தில், 55.60 கோடி டாலர் (2,780 கோடி ரூபாய்) அளவிற்கு முதலீடு மேற்கொண்டுள்ளது.மேலும், காக்ஸ் அண்டு கிங்ஸ் இந்தியா நிறுவனம், இங்கிலாந்தில் உள்ள இதன் துணை நிறுவமான புரோமித்தியோன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில், 19.50 கோடி டாலரை (975 கோடி ரூபாய்), முதலீடு செய்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இது குறித்து, வங்கியின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவால், சொத்துக்களின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி, இந்திய நிறுவனங்கள் அதிகளவில் அயல்நாடுகளில் முதலீட்டை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக, ஏற்றுமதி வருவாயை அதிகரிக்கும் நோக்கில், சொத்துக்களை கையகப்படுத்துவதில் இந்திய நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன' என்று தெரிவித்தார்.
கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், நடப்பு 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலத்தில், இந்திய நிறுவனங்கள் அயல்நாடுகளில் மேற்கொண்ட ஒட்டு மொத்த முதலீடு, 4,392 கோடி டாலர் (2 லட்சத்து 19 ஆயிரத்து 600 கோடி ரூபாய்) என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 1,798 கோடி டாலராக (89 ஆயிரத்து 900 கோடி ரூபாய்), குறைந்து காணப்பட்டது.இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் போது, புதிய சந்தை வாய்ப்புகளை பெறுகின்றன.இதன் காரணமாக, இந்திய நிறுவனங்களின் வர்த்தகம், சர்வதேச அளவில் விரிவடைகிறது. அதோடு மட்டுமின்றி, உலகளாவிய புதிய நவீன தொழில்நுட்பங்களையும் ஏற்று செயல்படுத்துவதற்கு இது வழிகோலுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|