பதிவு செய்த நாள்
10 டிச2011
00:26
புதுடில்லி:நடப்பு 2011ம் காலண்டர் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான, 11 மாத காலத்தில், புதிய பங்கு வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்ட தொகை, 114 கோடி டாலராக (5,472 கோடி ரூபாய்) சரிவடைந்துள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே காலத்தில் திரட்டப்பட்ட தொகையை விட, 89 சதவீதம் (1,075 கோடி டாலர் - 51 ஆயிரத்து, 600 கோடி ரூபாய்) குறைவு என, எர்னஸ்ட் அண்டு யங்க் (இ அண்டு ஒய்) நிறுவனம், வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு வியாபாரம்:நடப்பு 2011ம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரையிலுமாக, இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவில், பங்கு வியாபாரம் மிகவும் மந்தமாகவே உள்ளது. இதனால், பல நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை திரட்டிக் கொள்ள மூலதனச் சந்தையில் களமிறங்க ஆர்வம் காட்டவில்லை.
மேலும், இதுவரை பங்கு வெளியீட்டின் மூலம் நிதி திரட்டிய பெரும்பாலான நிறுவனப் பங்குகளின் விலை, அவற்றின் வெளியீட்டு விலையை விட மிகவும் சரிவடைந்துள்ளது.
இதனால், முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளில், பங்கேற்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதுவும் மூலதனச் சந்தையில் களமிறங்க திட்டமிட்டிருந்த நிறுவனங்களுக்கு, இடர்பாடாக உள்ளது.
34 பங்கு வெளியீடுகள்:நடப்பு 2011ம் ஆண்டின், இதுவரையிலுமான, 11 மாதங்களில், 34 நிறுவனங்களே பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. இது, கடந்த 2010ம் ஆண்டின் இதே காலத்துடன், ஒப்பிடும் போது, பாதியளவிற்கும் குறைவானதாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில், 71 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டன என, இ அண்டு ஒய் இந்தியா நிறுவனத்தின் பங்குதாரர் ஆர். பாலசந்தர் தெரிவித்தார்.அதேசமயம், நடப்பு 2011ம் ஆண்டில், இந்திய நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 17 ஆயிரம் கோடி டாலர் (8 லட்சத்து, 16 ஆயிரம் கோடி ரூபாய்) திரட்டும் என, பல ஆய்வு நிறுவனங்கள் மதிப்பிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.உள்நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் நடப்பாண்டில் இதுவரையிலுமாக, பங்கு வெளியீடுகளின் எண்ணிக்கையும், திரட்டப்பட்ட தொகையும், சென்ற ஆண்டின் இதே காலத்தை விட குறைந்துள்ளது.
ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், ஐரோப்பிய நாடுகளின் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில், சர்வதேச தர குறியீட்டு நிறுவனமான எஸ் அண்டு பி, அமெரிக்காவின் கடன் தகுதி குறியீட்டை குறைத்தது. இதனால், அமெரிக்காவிலும் பங்கு வர்த்தகம் மந்தமடைந்தது. இதுபோன்ற காரணங்களால் ஒட்டுமொத்த அளவில், உலக பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது.
சர்வேதச அளவில், நடப்பாண்டின், 11 மாத காலத்தில், புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக நிறுவனங்கள் திரட்டிய தொகை, கடந்தாண்டின் இதே காலத்தை விட, 45 சதவீத அளவிற்கும், எண்ணிக்கை அடிப்படையில், 20 சதவீத அளவிற்கும் குறைந்து போயுள்ளது.ஆசிய நாடுகள்:ஆசிய நாடுகளில், நடப்பாண்டின் 11 மாத காலத்தில், 543 நிறுவனங்கள் மட்டுமே பங்கு வெளியீட்டை மேற்கொண்டு, 7,770 கோடி டாலரை திரட்டி கொண்டுள்ளன. அதேசமயம், கடந்த 2010ம் ஆண்டின் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலுமாக, ஆசிய நாடுகளில், பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட தொகை, 17 ஆயிரத்து, 760 கோடி டாலராக இருந்தது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நடப்பாண்டில் இதுவரையிலுமாக அமெரிக்காவில், பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட தொகை, 16 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது. இதுவரையிலுமாக, அமெரிக்காவில், 114 நிறுவனங்கள் பங்கு வெளியீடுகளின் வாயிலாக, 3,640 கோடி டாலரை திரட்டி கொண்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகள்:இதே காலத்தில், ஐரோப்பிய நாடுகளில், பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட தொகை, 3,670 கோடி டாலரிலிருந்து, 2,960 கோடி டாலராக குறைந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு, 252 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை, 251 என்ற அளவில் இருந்தது. ஐரோப்பிய நாடுகளின், கடன் பிரச்னைக்கு தீர்வு கண்டால் தான், உலகளவில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மீண்டும் எழுச்சி காணும். இல்லாவிடில், பங்கு வர்த்தகம் மட்டுமின்றி, மூலதனச் சந்தையும் சுணக்கமாகவே இருக்கும் என, இ அண்டு ஒய் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|