பதிவு செய்த நாள்
10 டிச2011
00:28
புதுடில்லி:இந்தியாவில், மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. சென்ற அக்டோபர் மாதத்தில், 70.79 லட்சம் வாடிக்கையாளர்கள், புதிதாக மொபைல் போன் சேவையை பெற்றுள்ளனர். இதனையடுத்து, அக்டோபர் இறுதி நிலவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த மொபைல் போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை, முந்தைய மாதத்தை விட 0.89 சதவீதம் உயர்ந்து, 87.36 கோடியில் இருந்து 88.14 கோடியாக அதிகரித்துள்ளது.நாட்டில் மொபைல் போன் மற்றும் சாதாரண தொலைபேசியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அளவில், 91.40 கோடியாக அதிகரித்துள்ளது என, இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த அளவில், மொபைல் போன் மற்றும் தொலைபேசி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 91.40 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், இந்திய மக்கள் தொகை அடிப்படையிலான தொலைத் தொடர்பு அடர்த்தி, 76 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும், தொலைத் தொடர்பு சேவையை பயன்படுத்தியோர் குறித்த பட்டியல்படி, வாடிக்கையாளர் எண்ணிக்கை, 62.61 கோடியாக உள்ளது.சென்ற அக்டோபர் மாதத்தில், யூனினார் நிறுவனம், 26.6 லட்சம் புதிய மொபைல் போன் சேவைகளை வழங்கி, அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை, 3.23 கோடியாக உயர்த்தி கொண்டது.ஏர்டெல் நிறுவனம், 9 லட்சத்து 40 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 17 கோடியே 37 லட்சமாக உயர்ந்துள்ளது.
வோடபோன் நிறுவனம், 9 லட்சத்து 20 ஆயிரம் சந்தாதாரர்களை சேர்த்துக் கொண்டதன் மூலம், இதன் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 14 கோடியே 59 லட்சமாக உயர்ந்துள்ளது.ஆதித்ய பிர்லா குழுமத்தின், ஐடியா செலுலார் நிறுவனம், 16 லட்சத்து 30 ஆயிரம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 10 கோடியே 18 லட்சமாக உயர்ந்துள்ளது. ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 4 லட்சத்து 80 ஆயிரம் அதிகரித்து, 6 கோடியே 28 லட்சமாக அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், 10 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதன் மூலம், அதன் மொத்த வாடிக்கையாளரின் எண்ணிக்கை, 14 கோடியே 80 லட்சமாக அதிகரித்துள்ளது. எம்.டி.எஸ்., பிராண்டில் மொபைல் சேவை அளித்து வரும், எஸ்.எஸ்.டி.எல்., நிறுவனம், 7 லட்சத்து 40 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதன் மூலம், அதன் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கையை, 1 கோடியே 40 லட்சமாக உயர்த்திக் கொண்டுள்ளது.பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி. என்.எல்., ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 4 லட்சம் மற்றும் 31 ஆயிரத்து 788 என்ற அளவில் அதிகரித்து, முறையே 9 கோடியே 61 லட்சம் மற்றும் 56 ஆயிரம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|